Thursday, December 27, 2007

Taare Zameen Par - அபி ஆசிப் மீரானின் விமர்சனமும், எனது பாராட்டுரையும்

சிறுவர்கள் உலகம் அலாதியானது. அவர்கள் பார்வையில் இந்த உலகம் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்வது எவருக்குமே சற்று சிரமமானது. அவர்களுக்கான எழுத்தை எப்பொழுதுமே, குழந்தைப் பருவததை இழந்தவர்களே எழுதி வந்திருக்கிறார்கள். இந்த சூழலில், குழந்தைகளின் எழுத்தை ஊக்குவிக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகக் கொண்டு செய்ய வேண்டியது அவசியம். அபி ஆசிப் மீரான் எழுதிய நெகிழ வைக்கும் விமர்சனத்திற்கான எனது பாராட்டுகள் கீழே.

தமிழின் இலக்கிய மொழிகள் அல்லாமல், எளிமையான ஆங்கிலத்தில் விமர்சனமும், பாராட்டுரையும். அனைவரும் பாராட்டுவீர்கள் என்ற நோக்கத்துடன்,

அன்புடன்

நண்பன்




Dear Abi,

It's nice to read a story of a child from a child's point of view. There are many hapless children on whom the parents may thrust upon their own longings and desires to achieve, which they couldn't accomplish themselves in the first place. The story of your friend crying even after scoring 97% is pathetic. One should ask his father or mother how much they had scored in their maths exam. Perhaps they would not have scored much. They are simply violating the rights of the children, aren't they?


There are many mean souls in the world who feel that their efforts should be surpassed by only their children. Do you know how much pressure they apply on their kids? They are not aware that they are trying to live their bygone dreams and fantasies through their children's life forgetting that their kids may be having their own dreams and fantasies.


I once asked my son about his marks. He was one of the top five in the school. The question I put to him is: 'You need a little better efforts to be the first one in your class'.

He retorted - 'No 1 is not my aim. I allocate my time evenly between studying and living as a child. I do not want to miss out on my childhood for whatever reason. Once lost, it would never come back to me. I know. The criteria for being successful need not be standing first in the class. So, scoring mark is my business and leave it to me'


He reads, plays, visits friends at his own free will. I watch over him with a guarded look from far away - in-fact more than three thousand kilometer away. He is growing like a tree - with his roots firmly into the ground and throwing up the branches into the sky catching up the air, light, rain and dew as the nature offers him. The branches will eventually throws up blossom full of colours among the green leaves.


This is how, a kid should understand his own life - allocating one's time between his education and enjoying his childhood. And grow like a tree. Grow tall, in all directions.
The movie you had watched had brought about the difficulties a child might undergo if the world around them fails to understand their plight. Some kids may need extra attention to make them realise themselves. Who ever had produced a movie bringing out the humanity out of the viewers should be appreciated and encouraged to make such movies to refine the way we look at evaluating the human environment.


A refined taste is one of the few things a kid should learn. And you are probably being guided in the right direction, by your father.


Grow tall, child.

Wishing you well.

Shajahan

இனி கீழே, அபி எழுதிய விமர்சனம்.

Taare Zameen Par is a movie produced and directed by Aamir Khan. I enjoyed the movie very much that I watched it twice. It was a great movie and I suggest that everyone watch it especially parents. The boy's name is Ishaan. It is very upsetting to see that a nine year old boy cant read or write. His father doesnt even feel sad when he sent Ishaan to boarding school while Ishaan's mother and brother cry a lot. The movie is very emotional and has scenes that make some or maybe a lot of people cry. I cried in a lot of scenes. It might even teach a lesson to parents and make them love their children even more and make them feel lucky to have children after watching the film. My father always wanted me to get good marks. I think one of my classmates' parents make him study too much that he even cries in class if he gets 97%. He goes to tution for every subject that he is only free at 11:00 pm now that means his parents put a lot of pressure on him. The movie made every parent realise that every child is unique in their own way and have many talents like my sister is talented in singing and I am talented in computers they learn the importance of studies sooner or later and parents don't support a lot in their talents and want their children to race each other to get 1st rank and top marks. Aamir Khan says "If they fancy racing, breed racing horses not children" and I think some parents will understand this quote but some parents will get angry at this line. Thus I conclude that this movie is a very great one and it should make everyone realise how precious children are.

இனி, அபி ஆசிப் மீரானுக்கும், ஆமிர் கானுக்கும், அவரது சிறுவனுக்குமான உங்கள் பாராட்டுகளைப் பதிவு செய்யுங்கள்.

Friday, September 7, 2007

balu mahendra's Yaatra - Malayalam

மனதை விட்டு நீங்க மறுக்கும் திரைப்படங்கள் அவ்வப்பொழுது வந்து கொண்டு தான் இருக்கின்றன. அத்தகைய திரைப்படங்களைத் தந்தவைகளுள் மலையாளத் திரையுலகும் அடங்கும். மொழிகளைத் தாண்டியும் கலைகள் படைக்கும் முனைப்புடைய கலைஞர்களை அது எப்பொழுதும் வரவேற்றிருக்கிறது. அமோல் பலேகர், கமலஹாசன், சலீல் சௌத்ரி, நௌசத், பாலுமகேந்திரா என பலரையும் அது கவர்ந்திழுத்திருக்கிறது. கிடைத்தது மிக அற்புதமான படைப்புகள் சில. பரிட்சார்த்தமான முயற்சிகளும் அங்கு அதிகம். மனித உறவுகளின் நுட்பத்தை அது அலசி ஆராயும் விதம் அம்மாநிலத்திற்கு வெளியே கொச்சைப்படுத்தப்பட்டாலும், மலையாளத் திரையுலகம் முன் வைத்த கதைக் களங்கள், இந்தியத் திரை உலகில் ஒரு சிலரால் மட்டுமே முடிந்திருக்கிறது. ஆனால், அம்மாதிரியான திரைப்படங்களுக்கு, ஒரு மாநிலம் முழுவதும் மக்கள் தங்கள் ஆதரவைத் தருகிறார்கள் என்றால், அது அம்மக்களின் சிறப்பு என்றே சொல்ல வேண்டும்.

அந்த வகையில் யாத்ரா ஒரு முக்கியமான படைப்பு என்றே சொல்ல வேண்டும். எத்தனை முறை பார்த்தாலும், ஒரு புத்துணர்ச்சியும், மனிதநேயத்தைக் கொஞ்சமேனும் சிந்திக்கவும் செய்யும் ஒரு நல்ல படைப்பு.

ஒரு காதல் கதையை எப்படி ஒரு கவிதை போல் மென்மையாகவும், அதே சமயம் அந்தக் காதல் நிகழும் தளம் - காலம் எப்படி கொடூரமாக ஒரு நிமிடத்தில் தன்னை மாற்றிக் கொள்கிறது என்பதை அழுத்தமாகவும் தெரிவிக்கின்றது. காலத்தைக் கடந்து ஒரு படைப்பு நிலைத்து நிற்க வேண்டுமானால், கதை நிகழ் காலத்தை அது வலுவாக படம்பிடித்துக் காட்ட வேண்டும்.

85ல் வந்த இந்த திரைப்படம், இன்றளவும் நம் நடைமுறை வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது என்றால், அது மிகையல்ல. இன்றும் போலிஸ் ராஜ்ஜியத்தில் தான் வாழ்கிறோம். ஒவ்வொரு சமயத்தில் ஒரு உத்தியைக் கையிலெடுத்துக் கொள்கிறது – காவல் துறை – தன் இருப்பை நிலைநாட்ட, அன்று கம்யூனிஸ சித்தாந்தவாதிகளுடன் பிரச்சினை. இப்பொழுது தீவிரவாதம். நாளை என்னவோ…?

உன்னி என்னும் உன்னிகிருஷ்ணன். ஒரு அநாதை. ஒரு வன அதிகாரியாக பணி. புதிதாக வந்த இடத்தில் துளசியைச் சந்திக்கிறான். அவளுக்கு ஒரு தந்தை உண்டு. மனைவியை இழந்து அந்த துக்கத்தில் குடிக்கும் பழக்கம் உள்ள தந்தை. துளசி அந்த மலைச்சாரலில் நடை பயிலும் தென்றலைப் போன்றவள். ‘ஓணக்கோல்’ பிடித்து சிலையாய் நிற்கும் கிருஷ்ணன் தான் பேசுவதை நிச்சயமாய் கேட்பான் என்று நம்பிக் கொண்டிருப்பவள். கோயில் திருவிழாவில் இனிமையாகப் பாடி ஆடவும் செய்வாள். சுழலும் விழிகளில் எப்பொழுதும் பாவங்கள் ஓடிக் கொண்டேயிருக்கும்.

ரம்மியான மலைக் கிராமச் சூழ்நிலையில், இருவரும் சந்திக்கும் பொழுது, இயல்பாக காதல் மலர்கிறது. அதிலும் உணர்ச்சி மிக்க வசனங்களோ, பாட்டுப்பாடி காதலைக் ‘கொண்டாடும்’ காட்சிகளோ இல்லாமல், இயல்பான காட்சி நகர்வுகளுக்கிடையில் பேச்சுக்கிடையில் காதல் வெளிப்படுகிறது. இருவரின் அப்பாவித் தனமே இருவரையும் ஒருவர் பால் ஒருவரை ஈர்க்கிறது. சிறு சிறு குறும்பாக காட்சிகள் நகர்ந்து கொண்டிருக்கையில், திருப்பம் வருகிறது.

தன் திருமணத்தை தன் வாழ்க்கையில் கிடைத்த ஒரே நண்பனுக்கு அறிவிக்கும் பொருட்டு, நகரம் நோக்கி பயணம் போகிறான். அத்துடன் நயவஞ்சமிக்க ‘அரசு இயந்திரம்’ செயல்படும் எல்லைக்குள்ளும்.

நண்பன் இறந்து போய்விட்டதை தெரிந்து கொண்டு, மீண்டும் தன் ஊருக்குத் திரும்பும் பொருட்டு, நடந்து கொண்டிருந்தவன் ஒரு பெட்டிக் கடையில் சிகரெட் வாங்குவதற்காக தாமதித்த ஒரு பொழுதில், காவல்துறையின் கண்களில் படுகிறான். கைது செய்யப்படுகிறான். ஒரே குற்றம் – காவல்துறை தேடும் ஒரு தீவிரவாதியை ஒத்திருக்கிறான் தோற்றத்தில். எத்தனை சொல்லியும் கண்டுகொள்ளாத காவல்துறை அவனை ‘லாக்-அப்’பில் தள்ள, இங்கிருந்து வெளிப்படுகிறது – காவல்துறையின் ‘சலவை செய்யப்பட்ட’ மன நிலை. ஒரு கைதியாக இருந்தாலும் அவனுக்குக் கொடுக்க வேண்டிய அடிப்படை வசதிகளைக் கூட மறுக்கிறது. தாகித்தவன் தண்ணீர் கேட்ட பொழுது, ஒரு காக்கி அவனுக்கு மூத்திரம் பெய்து கொடுக்கிறது. அறியாமல் வாயில் விட்டுக் கொண்ட பின்னர், உணர்ந்து, ஆத்திரமடைந்து, தந்தவன் மூஞ்சியில் விட்டெறிய முனையும் பொழுது, அவன் விலகிக் கொள்ள அவனது அதிகாரியின் மூஞ்சியிலே விழுந்து விட, அவனுக்குப் பூசை நடத்த, கதவுகள் திறக்கப்படும் பொழுது, உன்னி தப்பி ஓட காக்கிகளுக்கும் உன்னிக்கும் ஏற்படும் போராட்டத்தில் ஒரு காக்கியைத் தூக்கி வீச, அவன் தலை சுவரில் மோதி மரணம்.

கொலையல்ல. திட்டமிடல் அல்ல. ஆனாலும் ஒரு உயிர் போய்விட்டது. ஆக, உன்னியின் பக்கம் எத்தனை தான் நியாயமிருந்தாலும், சிறை வாசம். கடிதம் மூலம் சிறையில் தான் இருப்பதைத் தெரியப்படுத்துகிறான். சிறை வாழ்க்கையின் அவலங்களின் மீது அடுத்ததாக கவனம் பதிக்கிறது கதை. கைதியாக வருபவனை அலட்சியமாக, அற்பமாக நோக்கும் சிறை பணியாளர்கள். அவர்களது நிர்வாணத்தைக் கூட ஏளனமாகப் பார்க்கும் வக்கிரம். மொட்டை அடித்தல்.

சிறையினுள் பல கைதிகளின் கதை சிறு சிறு காட்சிகளின் மீதாக வெளிப்படுத்தப்படுகிறது. சிறையில் பார்வையாளாராக வரும் பெண்கள் மீதான பாலியியல் துன்புறுத்தல்கள், பார்வையாளாராக அனுமதிக்க மறுக்கும் அவலம், கடிதங்கள் மூலம் நிகழும் உணர்ச்சி பரிவர்த்தனைகள், இரவின் நிசப்தத்தில் எழும் இசையற்ற பாடல்கள், கைதிகள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் குடும்ப பின்னணிகள் என்று பல இடங்களில் கண்களைப் பணிக்கச் செய்யும் காட்சிகள். நடுவே தப்பியோட முயற்சிக்கும் கைதிகள் பிடிபட்டு கொடூரமாக தண்டிக்கப்படுதல். அதையும் மீறி, வாழும் துடிப்புடன், தப்பிக்க நினைக்கும் உன்னி – துளசியைப் பார்த்துக் கொள்ள யாருமில்லை என்ற அதீத உணர்ச்சிப் பெருக்கு.. பிடிபட்டு ‘லாடம்’ கட்டப்படுகிறான். நடுவே துளசியின் தந்தை வந்து போகிறார். துளசியின் பரிதாப நிலையை எடுத்துச் சொல்கிறார். உன்னி துளசிக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். யாரையாவது திருமணம் செய்து கொள்ளச் சொல்லி. துளசியிடமிருந்து வரும் கடிதத்தை வாசிக்க மறுக்கிறான். ஒரு முழுதான சிறைவாசத்தை அனுபவித்து வெளி வருகிறான்.

சிறையிலிருந்து விடுபடும் நாள் வருவதை தெரிந்து துளசிக்கு கடிதம் எழுதுகிறான். இன்னமும் தனக்காகக் காத்திருந்தால், எப்பொழுதும் சந்திக்கும் அந்த ஒற்றை மரத்தடியில், ஒரு தீபத்தை ஏற்றி வைக்கவும். அவளுக்காக இறங்கி வருவதாய். இல்லையென்றால் அவளது நல்வாழ்க்கைக்காக ஒரு பிரார்த்தனையுடன், பேருந்தை விட்டு இறங்கி தொந்தரவு தராமல், தன் பிரயாணத்தைத் தொடர்வதாய்.

இந்த ‘யாத்ரா’ தொடருமா? இல்லை இத்துடன் முடிவுக்கு வருமா?

தன் பயணத்தில் நடக்கிறான். எவரும் அவனுக்கு வாகனங்களில் இடம் மறுக்க, ஒரு பள்ளிச்சுற்றுலா பேருதில் இடம் கிடைக்கிறது. இதுதான் படத்தின் முதல் காட்சி. இறுதிக் காட்சியும் இதே. பயணத்தில் அவன் சொல்லிய கதையில், அனைவரும் கலந்து, இறுதியில் துளசி அங்கு தீபத்துடன் நிற்க வேண்டுமே என்ற பிரார்த்தனையுடன் அனைவரும் பேருந்தின் சன்னல் வழியாக துடிக்கும் இதயத்துடன் காத்திருக்க…

துளசி நிற்கிறாள் – பெருகும் அன்புடன். ஆம். அவள் நிற்கிறாள் – ஒரு தீபத்துடன் அல்ல. ஆயிரமாயிரம் தீபங்களுடன். பிரகாசமாக. உன்னி இறங்கிக் கொள்ள, பள்ளிச் சிறுவர்களின் பயணம் தொடர்கிறது யாத்ரா பாடலுடன்.

நடித்தவர்களில் மனதைத் தொட்டவர்களின் பட்டியல் நீளம். உன்னியாக நடித்த மம்மூட்டி, துளசியாக ஷோபனா, பாலுமகேந்திராவின் காமிரா, இளையராஜாவின் இசை. அதிலும் பாலுமகேந்திரா, தனக்குப் பிடித்த மலைச்சரிவு கிராமத்தை ஒளிப்பதிவு செய்திருப்பதைக் காண கண் கோடி வேண்டும். ஏனென்றால், காமிரா என்பது ஒரு கண் என்ற அளவிற்கே மக்கள் அறிந்து வைத்திருந்த பொழுது, அதிலிருந்து எத்தனை வகையான பார்வைகளை மக்கள் முன் வைக்க முடியும் என்று அற்புதமாக காட்சிகளை வித்தியாசப்படுத்தி காட்டியவர் அவர். எல்லோரும், அவரது ஒளிப்பதிவுகளை மட்டுமே ரசித்துக் கொண்டிருக்க, அவரது பார்வைகள் காமிராவையும் தாண்டி, கதைக் களத்தில் விரிந்த பொழுது, சில அற்புத திரைப் படங்கள் கிடைத்தன. (இரண்டு பொண்டாட்டிக் காரன் கதை அவரிடத்தில் ஒரு obsession போல் பின்னர் ஒட்டிக் கொண்டது. அது அவருடைய குற்ற உணர்ச்சியினால் கூட இருக்கலாம்…)

மலைக்கிராமத்தில் புகை மூட்டங்களின் நடுவே விரியும் ஒளி வெள்ளத்தையும், இலைகளின் பசுமையையும், பூக்கள் பூத்து குலுங்குவதையும், இலைகள் பழுத்து சிவப்பதையும் படம் பிடிக்கையிலே நாம் தவறவிடுவது காலம் நகர்ந்து கொண்டிருப்பதை. வெட்ட வெளியில் வெளிச்சம் போடும் கோலத்தைக் காட்டினால், வெளிகளை வெட்டிக் கட்டப்பட்ட உள்புறத்தில், கசிந்து வரும் வெளிச்சம் என்னவோ, பாலுவின் காமிராவிற்காக மட்டுமே தாங்கள் அங்கு வருவதாக சொல்வது போலிருக்கின்றது.

வெளிச்சம், இருட்டு, வண்ணம் இந்த மூன்றினால் மட்டுமே காமிராவினால் பேச முடியும் என்னும் பொழுது, அதை குறித்து ஒரு புரிதல், அறிதல் இருந்தால் மட்டுமே அவற்றை உள்வாங்கிக் கொள்ள முடியும் ஒரு கலைஞனால். ஒரு சிறந்த திரைக்கதையும், அதை காமிராவின் மொழியில் சொல்லும் திறன் பெற்ற ஒரு கலைஞன் இருக்கும் பொழுது, அது நடிப்பவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும். மம்மூட்டி போன்ற நடிகர்களுக்கு இதை விட ஒரு நல்ல தளம் வேண்டுமா என்ன? இத்தனைக்கும் மம்மூட்டி அப்பொழுது ஒரு பெரிய நடிகர் கூட கிடையாது. அப்பொழுது தான் ஓடுடைத்து வெளியான சிறு பறவை போல் நடிப்புலகில் காலடி எடுத்து வைத்த நேரம். பறப்பதற்குச் சொல்லித் தர ஒரு அற்புத கலைஞன் கிடைத்த பொழுது, அதை மிகையற்ற தன் நடிப்பினால், எளிதாகக் கையாண்டிருக்கிறார். அது போன்றே, துளசியாக வரும் ஷோபனா. நாட்டியத்தில் பரிச்சியமுள்ள அவருக்கு விழி அசைவுகளும், உடல்வாகும் வெகுவாக ஒத்துழைக்கிறது. இவர்களுடன் இளையராஜாவின் இசையும் கூட்டணி அமைத்துக் கொள்கிறது.

இந்தக் கூட்டணியில், யாத்ரா ஒரு நதியாக, கரையுடைக்கும் பெருவெள்ளமாக இன்றி, அமைதியாக அமிழ்ந்து நீச்சலடிக்கத் தூண்டும் மென்மையுடன் பயணிக்கிறது.

படம் முடிந்து நீண்ட நேரமாகியும் துளசியும், உன்னியும் மனம் விட்டு நீங்க மறுக்கிறார்கள். காதலின் ஆழத்தைப் பார் – எங்கள் போல், உங்களால் ஒருவருக்கு ஒருவராகக் காத்திருக்க முடியுமா என்ற கேள்வியை எழுப்பிக் கொண்டே…

Friday, July 27, 2007

Born Into Brothels - English / Hindi

Born Into Brothels - English / Hindi

விளக்கைச் சுற்றும் விட்டில் பூச்சிகளுடன் முதல் ஷாட் ஆரம்பிக்கிறது. அடர்ந்த சிவப்பு வண்ணத்தில் தொடர்ந்த காட்சிகள் விரிகின்றன. பாலியியல் தொழிலாளி ஒருவரின் பார்வையில் ஒரு குறுகலான சந்து. காத்திருக்கிறார்கள் வாடிக்கையாளர்களுக்காக. தங்களால் இயன்ற அளவிற்கு அழகு படுத்திக் கொண்டு. புன்னகைக்கிறார்கள். சட்டையைப் பிடித்து இழுக்கிறார்கள். மதுபானங்கள் விளம்புகிறார்கள். பணம் எண்ணப்படுகிறது. வயதான பெண்கள் கஞ்சா புகைக்கிறார்கள். போதையில் ஆண்கள். தெருவில் உழலும் குழந்தைகள். இறுதியில் குப்பைத் தொட்டியில் பெருச்சாளிகள்.



Born Into Brothels.








சோனாகச்சி என்ற கல்கத்தாவின் பிரபலமான பாலியியல் தொழிற்பேட்டையின் வீதி ஒன்றில் தான் மேலே காட்டப்பட்ட காட்சிகள். பாலியியல் தொழிற்பேட்டையின் வாழ்க்கையைப் படம் பிடிக்க விரும்பி வந்த பிரிட்டிஷ் பெண் ஸனா பிரிஸ்கி என்ற பத்திரிக்கையாளர். சோனா கச்சியின் இறுக்கமான கட்டமைப்பைப் பிளந்து, ஊடுருவி எதையும் காண முடியவில்லை. அது ஒரு தனி உலகம். ஒரு பெரு வட்டத்திற்குள் இயங்கும் சிறுவட்டம். பெருவட்டத்திற்குள் இருப்பது அதற்கு அவசியம். ஆனால், அதனுடன் கலந்து விடுவதற்கு வழியில்லை. வெளியிலிருந்து வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. அதிலும் ‘அந்த சில மணித்துளிகளுக்கு’ மட்டுமே. எதையுமே புகைப்படம் எடுக்க முடியாது.

இந்தத் தெருவில் தங்கிக் கொண்டு, பாலியியல் தொழிலாளர்களுடன் நெருங்கிப் பழகி, அவர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்ய இயலாத, ஸனா, மாறாக, அந்தத் தெருவில், பாலியியல் தொழிலாளிகளின் குழந்தைகளுடன் நெருங்கிப் பழகுகிறார். அந்தக் குழந்தைகளுக்கு எதுவும் புரியவில்லை. யாரிந்தப் பெண், எதற்காக வந்திருக்கிறார் என்றெல்லாம் தெரியவில்லை. ஆனாலும், ஒட்டிக் கொள்கிறார்கள். அந்தக் குழந்தைகளுக்கு ஒரு புகைப்படக் கருவியின் வழியாக எப்படிப் பார்ப்பது, காட்சிகளை எப்படி தேர்வு செய்வது என்பது போன்ற புகைப்படக் கலையின் அடிப்படைகளைக் கற்றுத் தர ஆரம்பிக்கிறார். ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி புகைப் படம் எடுத்துக் கொள்வதுவும், பின்னர் அதை எவ்வாறு சரியாகச் செய்திருக்கிறார்கள் அல்லது என்ன தவறுகள் நிகழ்ந்திருக்கின்றன என்று விமர்சிப்பதுவும், தவறுகளை திருத்திக் கொள்வது எவ்வாறு என கற்றுத் தருகிறார். பின்னர் ஒவ்வொருவருக்கும் ஒரு புகைப்பட கருவியைத் தருகிறார்.

காட்சிகளாகத் தகும் அனைத்தையும் புகைப்படம் எடுக்கத் தூண்டுகிறார். ஒரு புகைப்படவியலாளராக, பத்திரிக்கையாளாராக உள்ளே நுழைய முடியாத அவருக்கு, இந்தக் குழந்தைகள் வழி அமைத்துத் தருகிறார்கள். பாலியியல் தொழிலாளர்களுக்கும் நம்பிக்கைப் பிறக்கிறது. அவரை முதலில் தயக்கத்துடனும், பின்னர் தாராளமாகவும் அனுமதிக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அவர்களது வாழ்க்கை பதிவு பெறுகிறது. அந்த குழந்தைகளே சோனாகச்சியின் வாழ்க்கை அனுபவங்களைப் பிட்டு பிட்டு வைக்கிறார்கள். தங்கள் வீட்டில் எவ்வாறு தொழில் நடக்கிறது என்பது முதற்கொண்டு.

தான் வந்த நோக்கத்திலிருந்து, பாலியியல் தொழிலாளர்களைப் பற்றிய பதிவை விட, அந்தக் குழந்தைகளின் மீதான பரிவாக பதிவு செய்வதில் கவனம் கொள்கிறார், ஸனா. புகைப்பட வகுப்புகள் மெருகேறிக் கொண்டிருக்கின்றன. நிறையப் புகைப்படம் எடுத்துத் தள்ளுகிறார்கள். வெவ்வேறு கோணங்களில் சோனாகச்சி வாழ்க்கை பதிவாகிறது. அந்த வாழ்க்கையைப் பற்றி வயதுக்கு வந்த பாலியியல் தொழிலாளர்கள் சொல்லவில்லை. மாறாக அந்தக் குழந்தைகள் சொல்கிறார்கள். உடைக்க முடியாத இரும்புக் கோட்டையாக மர்மமான பிரதேசமாக விளங்கிய அந்த சோனாகச்சி என்ற கோட்டையை இளக்கி, தன்னை அதனுள் அனுமதிக்க வழி வகுத்த அந்தக் குழந்தைகளுக்காக ஏதாவது செய்தாக வேண்டும் என்ற ஆவல் இறுதியாக எடுத்த வடிவம் தான் - Born Into the Brothels என்ற டாக்குமெண்டரி.


தங்களைச் சுற்றி இருக்கும் உலகைப் பற்றி எதார்த்தமாக பேசும் குழந்தைகள், அத்துடன் தங்கள் ஆசைகளையும், வாழ்க்கையைப் பற்றிய தங்கள் புரிதலையும் கூடவே பேசுகிறார்கள். பெண் குழந்தையை விற்க முயன்ற தந்தை, விரைவிலேயே பாலியியல் தொழிலாளியாக மாற்றப்பட போகும் சிறுமி என அந்தக் குழந்தைகளைச் சுற்றி ஒரு படுகுழி தயாராகிக் கொண்டிருக்கிறது. விரைந்து ஏதாவது செய்தாக வேண்டும். கோச்சி என்ற குழந்தையை பள்ளிவிடுதியில் சேர்ப்பதில் தொடங்கி, கொஞ்சம் கொஞ்சமாக மற்றவர்களுடைய வாழ்க்கையிலும் புகுந்து கொள்கிறார். இடையில், இந்தியா ஆளும் வர்க்கத்தின் சிறப்பு மிக்க ‘சிவப்பு நாடாக்களையும்’ சந்திக்கிறார். இவர்களின் வாழ்க்கையைப் பலருக்கும் எடுத்துச் சொல்லி, இந்த டாக்குமெண்டரிப் படங்களையும் திரையிட்டு, வசூல் திரட்டுகிறார். இந்தக் குழந்தைகள் எடுத்த புகைப்படங்களையும் தொகுத்து வணிக ரீதியாக பணம் திரட்ட முனைகிறார்.




இன்று அந்தக் குழந்தைகளில் சிலர் நல்ல நிலைக்கு வந்து விட்டனர். சிலர் புகைப்படக் கலைஞராகவே. ஆனால், எல்லோருக்கும் அந்த அதிர்ஷ்டம் வாய்க்கவில்லை. சிலரால், சோனகச்சியின் வாழ்வெல்லைகளை விட்டு, வெளியேற முடியவில்லை.








பாலியியல் தொழிலாளிகளின் வாழ்க்கைப் பதிவு என்று தொடங்கி, இத்தகைய இடங்களில் பிறந்து விடக்கூடிய குழந்தைகளின் அவல் நிலையைக் காட்டி, பின்னர் அவர்கள் வாழ்வின் ஈடேற்றத்திற்கான முயற்சி என்று பலதரப்பட்ட பாதைகளில் இந்த டாக்குமெண்டரி பயணித்தாலும், படத்தின் பின்னணி களம் பாலியியல் தொழிலாளிகளும் அவர்களது வாழ்க்கை சூழலும் எத்தகைய அவலமானது என்று சுட்டிக் காட்டுகிறது. தனி மனிதர்களின் முயற்சியினால் மட்டுமே திருத்திவிட முடிகின்ற சூழ்நிலை இல்லை. அரசின் முயற்சிகளும், உதவியும் கண்டிப்பாகத் தேவைப்படுகின்ற விஷயம் இது. ஆனால், இந்திய அரசுகள் இது குறித்து எதுவும் செய்ததாக தெரியவில்லை. வெறுமனே எய்ட்ஸ் தடுப்பு பிரச்சாரங்கள் மட்டுமே உதவப் போவதில்லை. பாலியியல் தொழில், அரசினால் அங்கீகரிக்கப்பட்டு, ஒரு தொழிலாக நடத்தப்படுவதற்குண்டான விதிமுறைகளை ஏற்படுத்தித் தந்தால் மட்டுமே, இங்கு நிலவும் சூழலை சரி செய்ய முடியும். இல்லையென்றால், சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில், இவர்களுக்குப் பாதுகாப்பாக நிற்க முனைபவர்கள் சட்ட விரோதிகளும், சுரண்டல் பேர்வழிகளுமாகத் தான் இருப்பார்கள். படத்தின் பல இடங்களில் இந்தப் பின்னணி நிழலாடுகிறது.


சில மாதங்களுக்கு முன் கல்கத்தாவின் பாலியியல் தொழிலாளிகள், தாங்கள் வருமான வரி கட்டுகிறோம் என்று அறிவித்த பொழுது, அதை மேற்கு வங்க அரசு ஏற்கவில்லை. அத்தனை தான் கம்யூனிஸ வாதிகளின் முற்போக்குத் தனம். அல்லது இந்தியாவின் ஆளும் வர்க்கத்தினரின் மனப்பாவம். இதற்கு முன்னர் கூட, மீரா நாயரின் ‘ஸலாம் பாம்பே’ என்ற திரைப்படம் ஒன்று வந்தது. சிவப்புப் பகுதியில் ‘சாயா’ எடுத்துச் செல்லும் அப்பாவி சிறுவர்களின் பின்புலத்தை வைத்து இயக்கப்பட்ட படம். அப்பொழுது, மிகத் தீவிரமாகப் பேசப்பட்ட படம். தொடர்ந்து மறக்கப்பட்டது. இப்பொழுது, இந்த டாக்குமெண்டரி. வந்த பொழுது, சிறிது பேசப்பட்டதாக நினைவு. இப்பொழுது எத்தனை பேருக்கு அது ஞாபகத்தில் இருக்கும் என்று தெரியவில்லை.
ஆனால், அவ்வப்பொழுது, யாராவது தொடர்ந்து இவ்வாறு குட்டிக் கொண்டிருந்தாலாவது கொஞ்சம் விழிப்புணர்ச்சி வருகிறதா எனப் பார்க்கலாம்.
















அரசிற்கு.

Tuesday, July 10, 2007

Monsieur Ibrahim -French

Monsieur Ibrahim and the flowers of Qur'an

என்ற படத்தின் கதையை ஒற்றை வரியில் சொல்ல வேண்டுமென்றால் - மனிதர்கள் தங்களுக்குள் உருவாக்கிக் கொண்ட, அனைத்து தடைகளையும் மீறி, அன்பும் உறவும் உண்டாக முடியும் என்பது தான். இந்த ஒற்றை வரியைக் கொண்டு ஒரு முழு கதையையும் பின்னியிருக்கிறார்கள். வயதான பெரியவருக்கும், ஒரு சிறுவனுக்குமிடையில் எழும் நட்பையும், விளையும் உறவுகளையும் நகைச்சுவை இழையோட, யதார்த்தமாக பேசும் இந்தப்படம் வெனீஸ் பட விழாவில், பார்வையாளர் விருது பெற்றதில் ஆச்சரியமில்லை.

படத்தின் இரு முக்கிய பாத்திரங்களுமே முரண்களின் மீது அமைக்கப்பட்டிருக்கிறது. எப்பொழுதுமே இரு முரண்களுக்கிடையில் நிகழும் உறவுகள் எல்லோரையும் ஈர்ப்பதில் எளிதாக வெற்றியடையும். இந்தப் படத்திலும் அந்த உத்தியைத் தான் கையாண்டிருக்கிறார்கள்.

மோஸஸ் என்ற சிறுவன், இப்ராஹிம் என்ற முஸ்லிம் பெரியவர் இருவருமே உறவினர்கள் அல்ல. அத்துடன், பொதுப்புத்தியில், இருவரும் இரு வேறு துருவங்களைச் சார்ந்தவர்கள். பெரியவர் முஸ்லிம். சிறுவன் யூதன். யூத முஸ்லிம் முரண்களைச் சொல்லித் தெரிவதில்லை. ஆனால், படம் யூத முஸ்லிம் முரண்பாடுகளைப் பற்றிப் பேசவில்லை. இன்னமும் சொல்லப்போனால், இரு பாத்திரங்களுமே தங்களை மதம் சார்ந்து வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. இத்தனைக்கும் மதங்களைப்பற்றிய கேள்விகள் எழுப்பப்படுகின்றன. படத்தின் இயக்குநர் சொல்வது, பெரியவர், சிறுவன் என்பது தான் கதை கட்டமைப்பே தவிர, யூத முஸ்லிம் பெயர்கள் இயல்பாக நிகழ்ந்ததாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிறார். They just happened to be Jew and Muslim.



இரண்டாவது முரணாக அமைவது - பாத்திரங்களின் குணங்கள். எல்லோரையும் நேசிக்கும் இயல்பை அனுபவத்தின் மூலம் பெறுகிறார் முஸ்லிம் பெரியவர். எதையும் நிராசையுடனும், அவநம்பிக்கையுடனும் நோக்கும் சிறுவனிடத்தில் எப்பொழுதும் ஒரு கோபம் மிளிர்கிறது. மன அழுத்தத்தில் சிக்கித் தவிக்கும் தந்தை, பிரிந்து சென்ற தாய், உன்னை விட உன் சகோதரன் புத்திசாலி என்று குத்திக் கொண்டேயிருக்கும் தந்தையின் சுடுசொற்கள், தன் அன்பை - காதலை நிராகரிக்கும் சக யூத சிறுமி என வாழ்க்கையின் அனைத்து திசைகளிலும் ஏமாற்றத்தையே சந்திக்கும் சிறுவன், இயல்பாக எல்லாவற்றின் மீதும் வெறுப்பு கொள்கிறான். முஸ்லிம் தாத்தாவோ நேர் எதிர். வானொலி கேட்டு நேரம் கடத்துவது, தெரு விபச்சாரிகளை ஒரு கண்சிமிட்டலோடு ரசிப்பது, கடைக்குள் எதேச்சையாகப் புகுந்து நீர் கேட்கும் சினிமா நடிகையைக் கண்டு, பரவச பதட்டமடைவது, தனக்கும் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருப்பது, ஏழ்மையினால் திருடும் சிறுவனைக் கண்டு கொள்ளாமல் இருப்பது, பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் அந்த சிறுவனிடத்தில், 'திருடுவதாக இருந்தால், என்னுடைய கடையிலே நீ திருடிக் கொள்' என்று தட்டிக் கொடுப்பது என பாசமிக்க மனிதராக பெரியவர் இருக்கிறார்.

இவர்கள் இருவருக்குமிடையில், உறவு வளர அல்லது பகைமை துளிர் விட பல காரணங்கள் இருந்திருக்கலாம். முஸ்லிம் பெரியவரை அரபி என நினைத்துக் கொண்டு, அவரிடத்தில் திருடுவது ஒன்றும் தவறில்லை என்று சிறுவனின் வெறுப்பு வெளிப்படுகிறது. சிறுவனை யூதனாக கண்டிருந்தால், அவனைத் தண்டிக்க முஸ்லிம் பெரியவர் முயற்சித்திருந்தால், அதை யாரும் குறை கூற முடியாது. ஆனால், பொறுமையாக சிறுவனுக்குப் புரிய வைக்கிறார். தான் ஒரு முஸ்லிம். எல்லா முஸ்லிம்களும் அரபிகளல்ல என்று. உறவு வளர அடிப்படையான காரணமாக, இருவருமே தாங்கள் தங்கி இருக்கும் நாட்டிற்கு அந்நியர் என்பதுவும், இருவருமே ஒரு வகையில் அநாதை வாழ்க்கையைத் தான் வாழ்கிறோம் என்ற புரிதலும் அமைகின்றன.

கதை வெகு எளிதானது. விபச்சாரிகள் நடமாடும் தெருவில், கடை வைத்திருக்கும் முஸ்லிம் பெரியவரின் கடையின் வாடிக்கையாளர் சிறுவன். தாய் பிரிந்து போன பின், கடைக்குச் சென்று வருவது அவனது பணி. அத்துடன் சமையலும். படிப்பிற்கு நேரமில்லை. அவனுடைய பிறந்த நாளைக் கூட மறந்து விடும் அவனது தந்தை எப்போழுதும் மன அழுத்தத்தில் உழல்பவர். அவனது சகோதரனை சிலாகித்தும், இவனை மட்டம் தட்டியும் பேசிக் கொண்டே இருப்பவர். அலுவலகம் விட்டு வந்ததும், மகன் சமைத்து வைத்திருப்பதை உண்டு விட்டு, இருக்கையில் முடங்கிக் கொண்டு எதையாவது படித்து நேரத்தைப் போக்கிக் கொண்டிருப்பவர். ஒரு கட்டத்தில், வேலையை இழந்து விட்டு, கொஞ்சம் பணத்தையும், உதவக் கூடிய நபர்கள் என்று ஒரு சில தொலைபேசி எண்களையும் எழுதி வைத்து விட்டு, வீட்டை விட்டு ஓடிவிடுகிறார்.

சிறுவன், கடையின் உரிமையாளரான, பெரியவரிடம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்குகிறான். அவருடைய வாழ்க்கையைக் குறித்த யதார்த்தமான அணுகுமுறை அவனை வெகுவாக ஈர்க்கிறது. தந்தை ஓடிய பின், ஒரு புதுவித சுதந்திரத்தை அனுபவிக்கும் அவன் தந்தை சேமித்து வைத்த புத்தகங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக விற்று பணம் சம்பாதிக்கிறான். தெரு விபச்சாரிகளிடம் அந்த பணத்தைக் கொண்டு போய் வருகிறான். தான் வளர்ந்து விட்டோம் என்ற கனவை வளர்த்துக் கொள்ளத் தான் இந்த வேலை. இதற்குள் ஓடிப்போன தந்தை, ரயிலின் முன் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறார். இப்பொழுது அவன் உண்மையிலேயே அநாதையாகி விடுகிறான். பிரிந்து சென்ற தாய் வருகிறாள். சுவர்களுக்கு 'பெயிண்ட்' அடிக்கும் வேலை செய்து கொண்டிருந்த அவன், தாயிடமே பொய் சொல்கிறான். மோஸஸ் தன் சகோதரன் பாலைத் (Paulie) தேடி எங்கோ போய்விட்டான் என்று. தன் பெயர் மோமோ என்கிறான். இந்தப் பெயர் பெரியவர் வைத்தது. முகமது என்ற பெயரின் மரூஉ தான் மோமோ. தனக்கு மோஸஸ் என்ற ஒரு பையன் தான் என்று கூறிவிட்டுப் போய்விடுகிறாள் தாய். தன் தந்தை தன்னை இல்லாத ஒருவனைக் கொண்டு மட்டம் தட்டியிருக்கிறார் இத்தனை நாட்களும் என்ற அறிதலில் இன்னமும் கோபம் அதிகமாகிறது. தன்னை நேசிப்பதை விட, வெறுக்க பல காரணங்கள் இருந்தும் அதையெல்லாம் விட்டு விட்டு, தன்னை ஒரு மனிதனாக மதித்து நடத்தும் அந்தப் பெரியவரின் மீதான மதிப்பு பல மடங்கு உயர்கிறது. தன்னைத் தத்து எடுத்து கொள்கிறாயா என்று பெரியவரிடம் கேட்க, அதற்கென்ன? உனக்கு விருப்பமென்றால், நாளையே தத்து எடுத்துக் கொள்கிறேன் என கூறி மறுநாள் அதிகாரபூர்வமாக தத்து எடுத்துக் கொள்கிறார். உன் மனைவி ஆட்சேபிக்க மாட்டாளா என கேட்க, கண்டிப்பாக இல்லை, நீ அவளை சந்திக்க விரும்புகிறாயா என கேட்கிறார். சிறுவன் ஆம் என சொல்ல, உடனே பயணத்திற்கு ஏற்பாடு செய்கிறார். எப்படி? ஒரு புது வண்டி வாங்கி, அதை ஓட்டக் கற்றுக் கொண்டு.



யூரோப் வழியாக பயணம் போகிறார்கள். வழியில் ஒவ்வொரு ஊரைப் பற்றியும் விளக்கிக் கொண்டே வருகிறார். புராதண இடங்களுக்குப் போகிறார்கள். தேவாலயத்திற்குப் போகிறார்கள். மசூதிக்குப் போகிறார்கள். சூஃபிக்கள் தங்களை மறந்து ஆடும் வழிபாட்டுக் கூடத்திற்குப் போகிறார்கள். துருக்கியை அடைகிறார்கள். ஏழ்மையிலும் அந்த மக்கள் உற்சாகமாக வாழ்வதைப் பார்க்கிறான். தெருக் கடையில் தேநீர் அருந்துகிறார்கள். தெருவில் நடனமாடும் இளைஞர்களுடன் சேர்ந்து ஆடுகிறான். எல்லா மனிதர்களும் நேசத்திற்குரியவர்கள் என உணர்கிறான். ஏழ்மை மகிழ்ச்சிக்கு குறுக்கே நிற்பதில்லை என புரிகிறது. தன் மனதில் மண்டிக்கிடந்த வெறுப்புகள் எல்லாம் மறைய, புதியவனாக உணர்கிறான். பின்னர் துருக்கியின் பாலைவனங்களில் பயணிக்கிறார்கள். பெரியவரின் ஊர் அருகே வந்ததும், அவனை கொஞ்சம் காத்திருக்குமாறு சொல்கிறார். பலபல வருடங்களாக ஊருக்கே வந்திராத அவர், ஊரின் நிலைமை என்னவென்று தெரிந்து கொண்டு திருப்பி வந்து அழைத்துக் கொள்கிறேன் என்கிறார். மோஸஸ் ஊருக்கு வெளியே தெருவில் நிற்கிறான். கிராமத்து சிறுவர்கள் அவனிடம் பேசுகிறார்கள். மொழி புரியவில்லை. என்றாலும் கையில் இருக்கும் புகைப்படக் கருவியைக் காட்டி காட்டிப் பேசுகிறார்கள். அவன் அவர்களைப் புகைப்படமெடுக்கிறான். அவன் அவர்களிடத்தில் வீட்டுக்குப் போகுமாறு சொல்லி விட்டு, வாகனம் சென்ற பாதையில் நடந்து செல்கிறான். அதற்குள் அவனைத் தேடிக் கொண்டு, கிராமத்தில் இருந்து ஒருவன் வருகிறான். வழியிலே அவர்கள் வந்த வாகனம் விபத்துக்குள்ளாகி தலைகுப்புற கிடக்கிறது. வீட்டில் தலையில் பலத்த காயத்துடன், இப்ராஹிம் படுக்கையில் கிடக்கிறார். 'என் பயணம் முடிந்து விட்டது. எல்லையற்ற பரப்பில் கலந்து கொள்ள போகிறேன். எனக்கும் மனைவி இருந்தாள். பல நாட்களுக்கு முன் இறந்து விட்டாள். என்றாலும் அவளை நான் இன்னமும் நேசிக்கிறேன். எல்லா வாழ்க்கைகளும் ஒரு முடிவிற்கு வரத் தானே செய்யவேண்டும். இதோ இதை நீ வைத்துக் கொள்' என தான் அதுவரையிலும் வாசித்துக் கொண்டிருந்த குரானையும் தன் உயிலையும் கொடுக்கிறார். அவன் உயிலை வாசிக்கிறான் - என்னை தந்தையாக மோசஸ் ஸ்மித் தேர்ந்தெடுத்ததால், நான் வாழ்வில் கற்றுக் கொண்டதை அனைத்தையும் அவனுக்கே கொடுக்கிறேன்.

மோஸஸ் அந்தக் கடையின் உரிமையாளன். அவனையும் இப்பொழுது தெருமுனை அரபி என்றே விளிக்கிறார்கள். இப்ராஹிமால் மோமோ என்று செல்லமாக - முகம்மதுவின் சுருக்கமாக மோமோ என அழைக்கப்பட்டாலும், அவன் மோசஸாகத் தான் இருக்கிறான் சட்டப்படி. ஆனால், தெருவினருக்கு அவன் - மோமோ.

ஒரு நிறைவைத் தந்த படம். மனித நேயமிருந்தால், எந்த தடைகளையும் தாண்டி நேசிக்க முடியும் என்பதே செய்தி. முஸ்லிம்களைப் பற்றி எதிர்மறையான தகவல்களையேத் தந்து கொண்டிருக்கும் ஊடகங்களுக்கிடையில், இஸ்லாம் பற்றிய நல்ல விஷயங்களைக் கொண்டு கதையை நகர்த்துவது ஒரு மாறுதல். அதற்கு வலு சேர்க்கும் விதமாக, கதையின் வயதான பெரியவராக ஓமர் ஷெரிஃபை நடிக்க வைத்திருக்கிறார்கள். மனிதர் கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல், தனது மிகையற்ற நடிப்பின் மூலம், மான்ஸியர் இப்ராஹீமாகவே வாழ்ந்திருக்கிறார். இந்தப் பாத்திரம் குறித்து, பின்னர் குறிப்பிட்ட ஓமர், இந்தக் கதை தனக்காகவே அமைந்ததாக குறிப்பிட்டார். 'உண்மையான இஸ்லாம் அன்பையும், புரிந்து கொள்ளுதலையுமே தருகிறது - வன்முறையையும், தீவிரவாதத்தையும் அல்ல. இந்த திரைப்படத்தின் மூலம், தங்கள் மதங்களையும் கடந்து ஒருவரையொருவர் நேசிக்க முடியும் என்ற செய்தியை மக்களுக்கு என்னால் எடுத்துச் சொல்ல முடியும் என்ற உண்மை எனக்குப் பிடித்திருக்கிறது' என்றவரின் நடிப்பிற்குப் பரிசு கிடைத்தது - சிறந்த நடிகருக்கான சீசர் விருது.

கதையின் திரைக்கதை நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிறது. யாருக்காவது திரைக்கதை அமைப்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், இப்படத்தைப் பார்க்க வேண்டும். அரபி தானே, இவரை ஏமாற்றுவதில் ஒன்றும் தவறில்லையென சிந்திக்கும் சிறுவனிடத்தில் சிரித்துக் கொண்டே சொல்கிறார் - தான் அரபி அல்ல என்று. சிறுவன் அதிசயத்துடன் தன் தந்தையிடம் கேட்கிறான். மனதில் இருப்பதை ஒருவரால் அறிய முடியுமா என்று. நமக்கும் அதே கேள்வி எழுகிறது. பின்னர் - வேறொரு சந்தர்ப்பத்தில் அதற்கான விடையை இயக்குநர் தருகிறார்.

பெரியவர் சொல்கிறார் - தான் ஒரு சூஃபி என்று. அதுவும் வெளியே ஒரு சுற்று சுற்றி வரலாம் என்று நகர வீதிகளில் சுற்றி விட்டு, ஒரு கடையில் உட்கார்ந்து மது அருந்திக் கொண்டே சொல்கிறார். முஸ்லிம்கள் மது அருந்தலாமோ என ஐயப்படும் சிறுவனுக்கு விடை சொல்லும் பொழுது சொல்கிறார். சூஃபிக்கள், மனித நேயத்துடன் செயல்படுபவர்கள். மதங்களைத் தாண்டி மக்களிடம் அன்பு செலுத்துபவர்கள். வருவதை முன்கூட்டி அறிபவர்கள். தன் மரணத்தைக் கூட அந்தப் பெரியவரால் சொல்ல முடிகிறது. வாகனம் வாங்குவதற்காக கடைக்காரனுடன் பேரம் நடக்குமிடத்தில் எத்தனை நாட்களில் தருவீர்கள் என்று கேட்கையில், இரண்டு வாரம் என்கிறார் கடைக்காரன். இரண்டு வாரங்களில், நான் இறந்து விடுவேன் ஐயா என்கிறார் பெரியவர். பேரத்திற்காகப் பேசப்பட்ட வசனமாக அப்பொழுது தோன்றி, கவனத்தில் நிற்காது போய்விட்டாலும், பின்னர் இரண்டு வாரங்களில் அவர் மரணிக்கும் பொழுது, முன் நிகழ்ந்த இந்த உரையாடல் மனதில் எழுகிறது. இப்படி சூஃபிக்களின் குணங்கள் என்று மக்கள் நம்பும் ஒவ்வொன்றையும் இணைத்திருக்கிறார்கள். அதை மேலோட்டமாக படம் பார்த்தால் உணரமுடியாது. கொஞ்சம் உன்னிப்பாகக் கவனித்தால், அதுவும் சூஃபிக்களைப் பற்றிய பின்னணி தகவல்கள் இருந்தால் மட்டுமே உணர முடியும்.



துருக்கியில் சூஃபிக்கள் குழுமி, பரவசத்துடன் ஆடுமிடத்தில் சிறுவனிடத்தில் சொல்கிறார் - Throw your hand up in the air, lean your head on your shoulders, and spin around your heart in ecstasy and loose all your bearings. You will find a new way bearing life for you.

Good.

ஆனால், இயக்குநர் முன்வைக்கும் இத்தகைய ஒரு இஸ்லாத்தை எத்தனை பேர் ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. சூஃபிக்களைப் பற்றி இஸ்லாமியர்களிடத்திலே மாற்றுக் கருத்துகள் நிறைய உண்டு. இறைவனின் புகழ் பாடி, ஆடித்திரிவதிலே வணக்கம் புரியும் சூ•பிக்கள், அரசு நடத்தி, செல்வம் சேர்த்து வாழும் முஸ்லிம்களிடத்திலிருந்து பெரிதும் மாறுபட்டவர்கள். அதனால் அவர்களை நேசிப்பதிலும், தூற்றுவதிலும் சமபங்கு முஸ்லிம்களிடத்தில் உண்டு. அதிகார மையத்திலும் அதற்கு அருகாமையிலும் இருப்பவர்களிடத்தில், சூஃபிக்களைப் பற்றிய அச்சம் உண்டு. ஏழை எளிய மக்களிடத்தில், அந்த அச்சமின்றி, மதிப்பும் மரியாதையும், அன்பும் ஏராளம் உண்டு. அதிகார மையங்கள் தேவையான பொழுதில் மட்டுமே இறங்கி வரும். அக்பர் அஜ்மீர் வருவார், அதுவும் காலணிகள் அணியாது - காரணம் புதல்வன் இல்லாமை. இது போல் தேவைகள் தான் அதிகார மையங்களை கீழிறங்கச் செய்கிறது. இத்தகைய சூஃபிக்களிடத்தில் அன்பு கொள்ளும் எளிய முஸ்லிம்களால், முஸ்லிம்களாகத் தான் வாழ முடியுமே தவிர, அரசியல் சக்தியாக மாற்றங்களைத் தேடிக் கொள்ள முடிவதில்லை. அதனால் பக்திக்காக மாத்திரமே சூஃபிக்களை ஏற்றுக் கொள்ளும் முஸ்லிம்கள், அதிகார மையம் நோக்கிய பயணத்தில், இத்தகைய நேயத்தை ஏற்றுக் கொள்வதில்லை.

படத்தின் எந்த ஒரு கட்டத்திலும், ஒரு மதம் சார்ந்த தீவிரமான கருத்துப் பிரச்சாரமில்லை. தான் நம்புபவற்றைப் பேசுகிறார்கள். அடுத்தவரை மாற்றி தங்கள் மதத்தின் பால் ஈர்த்துவிட வேண்டும் என்ற முனைப்பில்லை. Fundamentalism என்பதற்கான விளக்கம் இதுவரையிலும் முற்றிலுமாகக் கொடுக்கப்படவில்லை யாராலும். என்னைப் பொறுத்தவரை, அடுத்தவர் மீது தங்கள் கருத்தைத் திணித்து, தங்கள் நம்பிக்கையின் பால் அவர்களை ஈர்த்துவிட வேண்டும் என்ற உன்மத்தமே fundamentalism என்று சொல்ல வேண்டும். மாறாக, தாங்கள் உண்மை என நம்புபவற்றின் மீதான நம்பிக்கைகளை அடிப்படைவாதம் என்று சொல்லுவது தவறு. இதை அடிப்படைவாதம் என்பவர்கள் பொய்யர்கள். 'என்னை தந்தையாக மோசஸ் ஸ்மித் தேர்ந்தெடுத்ததால், நான் வாழ்வில் கற்றுக் கொண்டதை அனைத்தையும் அவனுக்கே கொடுக்கிறேன்.' என்று தன் உயிலில், மோஸஸ் ஸ்மித் என்ற சிறுவனை இஸ்லாமியராக மாற்ற முயற்சிக்காமல், யூதராகவே ஏற்றுக் கொண்டு மகனாக பாசமும் நேசமும் காட்டியது தான் படத்தின் வெற்றியே. மத மாற்றத்திற்கான எந்த ஒரு முயற்சியும் இன்றியே, அன்பையும் பாசத்தையும் வெளிப்படுத்துவதே மனித நேயம் - அடிப்படைவாதத்தை வென்றெடுக்கும் வழி என்பது தான் இந்தப் படம் தரும் செய்தி.

ஒரு நேர்மையான செய்தியை முன் வைத்த படத்தை பார்வையாளர்கள் சிறந்த படமாக தேர்ந்தெடுத்தில் எந்தத் தவறுமில்லை. தேர்ந்தெடுக்காமல் போயிருந்தால் தான் மனித நேயம் தோற்று, அடிப்படைவாதம் வென்றிருக்கும்.

கட்டாயம் பாருங்கள். இயல்பான, அன்றாட வாழ்க்கையின் பகுதியாக அமைந்த உரையாடல்கள் வழியாக, நாம் உணராமலே, நம்மிடத்தில் மனித நேயத்தை காட்டுகிறது. எதுவும் பேசப்படாமல்.

அது தானே திரைப்படம்.

Friday, June 8, 2007

Deepa Mehta's Water.

Deepa Mehta's Water.

தனது முப்படைப்புகளில், மூன்றாவது படைப்பாக Water என்ற திரைப்படத்தை 7 வருட போராட்டத்திற்குப் பின், வெளிக்கொண்டு வந்திருக்கிறார்,

சமூகத்தால் விதவைகள் எவ்வாறு புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதை விவாதிக்கும் படம். கதைக்களம் 1938. ஆங்கிலேயருக்கு எதிராக நடக்கும் பலவகைப் போராட்டங்களிற்கிடையில், சமூக மாற்றங்களுக்காகவும் பல போராட்டங்களுக்கு களம் அமைக்கப்பட்ட நேரம்.

சுய்யா என்ற எட்டு வயது சிறுமி விதவையாகின்ற பொழுதில் தொடங்குகிறது படம். வளையல்கள் உடைக்கப்பட்டு, தலை மொட்டையடிக்கப்பட்டு, வெள்ளுடை உடுக்கப்பட்டு, விதவைகள் காப்பகத்தில் அடைக்கப்படுகிறாள்.



ஆம், அது ஒரு சிறை தான். சாவை எதிர்நோக்கிய வாழ்க்கையை, விதவைகள் வாழ்வதற்கென அமைக்கப்பட்ட விடுதி.

"இனி இது தான் உன்னுடைய வீடு" என்னும் தந்தையிடம், "வீடென்றால், அம்மா எங்கே" என கேட்கும் சுய்யாவிற்கு விடை தர இயலாதவர்களால், உள்ளே இழுத்துச் செல்லப்படுகிறாள். கதவு இழுத்து அடைக்கப்படுகிறது - இந்த உலகும் அன்றிலிருந்து அவளுக்கு மறுக்கப்படுகிறது.

மதுமிதா என்ற விடுதித் தலைவி, சகுந்தலா என்ற நடுத்தரவயதைத் தொட்ட விதவை, கல்யாணி என்ற இளம் விதவை, இவர்களுடன் மேலும் பல வயோதிக விதவைகள், சாகும் வரை வாழ்ந்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில், அந்த விடுதியிலிருந்தாலும், ஒவ்வொருவரும், வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தை நேர்கொள்ளும் விதத்தில் படத்தின் கதை சுவராஸ்யமாக நகர்கிறது.

உலகின் அனைத்து வாசல்களும் மூடப்பட்டாலும், விளிம்பு நிலையில் வாழும் இந்த விதவைகளின் உலகிற்குள்ளும், செய்திகள் வருகின்றன. குலாபியின் மூலமாக. குலாபி ஒரு திருநங்கை. மதுமிதாவிற்கு கையாள். வாடிக்கையாளார் பிடிப்பது மட்டுமின்றி, கஞ்சா கொண்டு வந்து மதுமிதாவிற்குக் கொடுப்பதுவும், ஊர்ப் புறணிகளை பேசுவதும் அவள் தான்.

விநோதம்- சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட, இருவகை மனிதர்கள் - விதவைகள், திருநங்கை இணைந்து, இந்த உலகை அதன் போக்கில் சந்திக்கும் விதம். இந்த உலகம் அந்த விதவைகள் உலகிற்குள் வேறு எந்த வகையிலும் நுழைய மறுக்கும் பொழுது, அதே விளிம்பின் மற்றொரு தளத்தில் இருக்கும் ஒரு திருநங்கையின் உதவியால், விடுதியின் செலவு சரிக்கட்டப்பட வாடிக்கையாளர் பிடிப்பது நடக்கிறது. உலக நடப்புகள் அறியப்படுகிறது. ஊர்நடப்பாக, காந்தியைப் பற்றிய செய்தியும் வருகிறது - அனைத்து தகவல்களும், பின்னணியும். ஆனால், அது தலைவியோடு முற்றுப்பெறுகிறது. மற்றவர்களைப் போய்ச் சேரவில்லை. சேரவிடுவதில்லை.

மதுமிதாவின் தோரணையைக் கண்டு கொஞ்சமும் அஞ்சாதவள், சகுந்தலா. படிக்கத் தெரிந்தவள். படிப்பினால் கிடைத்த அறிவும், கண்ணியமும் மிக்கவள். அம்மா இல்லாத வீடா என்று விடுதியை ஆரம்ப நாளன்று ரணகளப்படுத்திய சுய்யா, அம்மாவின் வடிவமாக சகுந்தலாவைப் புரிந்து கொண்டாளோ என்னவோ, பட்டென்று ஒட்டிக் கொள்கிறாள்.

சுய்யாவின் மற்றொரு நட்பு - கல்யாணி. சில சலுகைகள் வழங்கப்பட்டு, விடுதித் தலைவியின் தனிப்பட்ட கரிசனத்திற்குரித்தானவள் கல்யாணி. காரணமில்லாமல் இல்லை. விடுதியின் செலவை சரிகட்ட, கல்யாணியின் இளமை விபச்சாரத்திற்குள்ளாக்கப்படுகிறது. அதனால், தலையில் நீளமாக முடி வளர்த்துக் கொள்ள அனுமதிக்கப்படுகிறாள். செல்லப் பிராணியாக ஒரு நாய் - காலு என பெயர். ஆனால், அதே சமயம் அவள் தூய்மையற்றவள் என மற்ற விதவைகள் ஒதுக்குகிறார்கள். பகலில், தனது நாயுடனும், இஷ்ட தெய்வம் கிருஷ்ணன் வழிபாட்டிலும் கழிகிறது. இரவு நேரங்களில், குலாபியினால் அழைத்துச் செல்லப்படுகிறாள் - வாடிக்கையாளர்களைச் சந்திக்க.

இந்த நால்வருக்குமிடையிலும், விடுதியின் பின்னணியிலும் விதவைகளின் பிர்ச்சினைகள் அலசப்படுகின்றன. மதுமிதா வயதானவள். வாழ்க்கையில் கஞ்சா பிடிப்பது ஒன்றே பெரும் பாக்கியம் என்று எண்ணியே வாழ்பவள். அதே சமயம் விதவைகளுக்கு இந்து மத தர்ம விதிகளால் நிர்ணயம் செய்யப்பட்ட வாழ்க்கையை, விதவைகள் கட்டாயம் கடைப்பிடித்தே ஆகவேண்டும் என்று உறுதியாக இருப்பவள்.

சகுந்தலாவும், இந்து மத நம்பிக்கைகளைத் தீர்க்கமாக நம்புபவள். அதன்படி நடக்கவும் செய்பவள். மதுமிதா போன்ற அராஜகம் இல்லாதவள். நடுத்தரவயதுடையவள். புதிய நம்பிக்கைகளை, வாழ்க்கை வடிவங்களை - அனுமதித்தால், ஏற்றுக் கொள்ளத் தயங்காதவள். விதவைகள் மறுமணத்திற்கு ஆதரவாக சட்டமிருக்கிறது என்ற செய்தியைக் கேட்டதும், மதுமிதாவினால், சிறை வைக்கப்பட்ட கல்யாணியை விடுவிக்கிறாள். மத ஆச்சாராங்களை மீறுகிறோம் என்ற படபடப்பின்றி.

கல்யாணி - மத தர்மங்களைப் பற்றிய பெரிய புரிதல் ஏதுமில்லையென்றாலும், விடுதியின் நன்மைக்காக தன்னை மதுமிதா உபயோகித்துக் கொள்வதை விதி என்ற தத்துவார்த்தப் புரிதலுடன், விபச்சாரத்தில் தான் ஈடுபடுத்தப்படுவதை சகித்துக் கொள்கிறாள்.

சுய்யா சிறுமி. மத தர்மங்களைப் பற்றிய பயமோ, விதியென்னும் தத்துவப் புரிதலோ, இல்லாமல், இயற்கை நீதியின் அடிப்படையில் இயல்பான கேள்விகள் எழுப்புகிறாள். 'ஆண் விதவைகள் வீடு எங்கே இருக்கிறது?' என்பது போன்ற கேள்விகள் ஆங்காங்கே. பதில் சொல்லத் தான் யாருமில்லை. Obviously, she might be the voice of the Director.

கல்கத்தாவில், தனது வக்கீல் படிப்பை முடித்து விட்டு, ராவல்பூருக்குத் திரும்புகிறான் - நாராயண். அத்துடன் காந்தியின் தத்துவங்களையும் தன்னுடன் எடுத்து வருகிறான். ஊருக்குத் திரும்பும், நாராயணனைத் தற்செயலாக, ஆற்றங்கரையில் சந்திக்கிறாள் - கல்யாணி. பார்த்ததும் காதல். பார்ப்பதற்கு ஒரு தேவதை போன்று தோற்றமளிக்கும், கல்யாணியை யாருக்குத் தான் பிடிக்காது? கண்களின் வழியாக வெளி உலகுடன் பேச முனையும் அவளது புனிதம், உடலைச் சுற்றிய பாவங்களையும் மீறி சுடர்விடுகிறது. அவளைத் தேடித் திரிந்த நேரம் போக, மீதி நேரங்களில், தன் நண்பனுடன் பேசி, தான் சார்ந்த பணக்கார மேல்வர்க்கத்தின் - பிராமின்களின் தன்மையை அறிந்து கொள்கிறான். இரவில், ஆற்றைக்கடந்து, அக்கறையில் இருக்கும் பணக்கார பிராமின் வர்க்கத்திற்கு இரையாகும் விதவையையும், குலாபியையும் பார்க்கிறான். இது அன்றாடம் நடக்கக் கூடியது என சொல்கிறான் நண்பன். விதவைகள் மீது இன்னமும் பரிதாபம் பிறக்கிறது. எப்படியும் விதவையான கல்யாணியைத் திருமணம் செய்து கொள்ள உறுதி கொண்டு தன் தாயிடம் கல்யாணியைப் பற்றிப் பேசுகிறான். பதறிப் போகும் தாய் ஏற்க மறுக்கிறாள். நாராயணனுக்கு அது பற்றிக் கவலையில்லை. தன் முற்போக்கு சிந்தனைகளுக்கு தன் தந்தை ஆதரவு தருவார் என்ற நம்பிக்கையுடன், கல்யாணியைத் தொடர்கிறான். சிறிய சிறிய சம்பவங்களுக்குப் பின்னர், காதல் உறுதியாக, திருமணம் செய்வதற்காக, ஆற்றைக் கடந்து செல்லும் பொழுது, அக்கறையில் தோன்றும், தன் வீட்டின் பின்வழியை அவளுக்குக் காட்டுகிறான். படகில் இருந்தவாறே. அவளுக்கு அந்த வீட்டைத் தெரியும் - பலமுறை வந்து சென்றதினால். படகைத் திருப்பச் சொல்கிறாள். எந்தக் காரணமும் தர மறுக்கிறாள். உன் தந்தையிடம் கேள் என்கிறாள். அவளை இக்கரையில் விட்டு விட்டு, தன் வீட்டையடைந்து, தன் தந்தையிடம் கல்யாணியைப் பற்றிப் பேசுகிறான். வாதாடுகிறான். தன் தந்தை எடுத்து வைக்கும் பிற்போக்குப் பிராமணிய சிந்தனைகளைக் கேட்டு, அதிர்ச்சியடைகிறான். 'ஒரு பிராமணன் எத்தனைப் பெண்களையும், எத்தகையப் பெண்களையும் அனுபவிப்பதில் தவறில்லை. ஆனால், திருமணம் செய்து கொள்ளக் கூடாது. நீயும் அவளை வைத்துக் கொள். ஆனால், திருமணம் செய்யாதே' என அறிவுறுத்துகிறார். தந்தையைப் பற்றிய பிம்பங்கள் உடைய, தன் முடிவை மாற்றிக் கொள்ள மறுத்து, வீட்டை விட்டு வெளியேறுகிறான். சற்றுத் தள்ளி மறைவில், நின்று இந்த உரையாடல்களைக் கேட்கும் தாய், தன் மகனை உச்சி முகர்ந்து வாழ்த்தி அனுப்புகிறாள் - தன் கணவனைப் போன்று அல்லாமல், நியாய உணர்வு கொண்டவனாக தன் மகன் இருப்பதில் பெருமிதம் கொண்டவளாக.

தந்தையினால் துய்க்கப்பட்ட உடலை, மகனுக்கு மனைவியாகத் தர இயலாத சூழ்நிலையை உணர்ந்து, விடுதிக்குத் திரும்பும் கல்யாணியை ஏளனத்துடன் வரவேற்கிறாள் - மதுமிதா, நிபந்தனைகளோடு. 'வாடிக்கையாளர்களைச் சந்திக்க வேண்டும்.'

காதல் வயப்படும் முன், எந்த உணர்ச்சிகளுமின்றி, சலனமின்றி, வாடிக்கையாளர்களைச் சந்திக்கச் சென்ற கல்யாணிக்கு இப்பொழுது அந்த நினைப்பையே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவளுக்குத் தெரியும் - நாரயணனை என்றுமே மணக்க முடியாதென்று. அதே சமயம் நாரயணனை என்றுமே தன் மனதினின்றும் துறக்கவும் முடியாது. மனதிலே நாரயணனின் நினைவுகளைச் சுமந்து கொண்டே, வாடிக்கையாளர்களின் தேகங்களையும் சுமக்க அவள் தயாராக இல்லை. இப்பொழுது அவளுக்கு முன் இருந்த ஒரே வழி - கங்கையின் நீரினுள் அமிழ்ந்து, தன் அசுத்தங்களையெல்லாம் நிரந்தரமாகத் துறந்து விடுவது ஒன்று தான்.

நீர் சுத்தம் செய்யும் - எல்லா அழுக்குகளையும் போக்கி விடும். கல்யாணியின் அசுத்தங்கள் அனைத்தும் கரைந்து போயின. அவளும் கரைந்து போனாள்.

கல்யாணியின் மறைவு, சுய்யாவிற்கு ஒரு நட்பு இழப்பு. தன் பிறந்த வீட்டைப் பற்றிய திடீர் நினைப்பு. சகுந்தலாவிற்குள் இந்த விதவைக் கோலத்தை மாற்றத் துடிக்கும் உறுதி. நாராயணனுக்கு, தந்தையின் பிற்போக்கு பிராமணியத்தை உதறித் தள்ளி விட்டு, காந்தியின் வழியில் போக வேண்டும். ஆக ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு போராட்டம். கல்யாணியின் சிதையினருகில், அமர்ந்திருக்கும் சுய்யா, சகுந்தலாவிடம் சொல்லிக் கொள்ளாமலே, விடுதிக்குப் போய், மதுமிதாவிடம் சொல்கிறாள் - தன்னை வீட்டுக்கு அனுப்புமாறு. கல்யாணியின் இழப்பால், பெரிதும் நட்டமடைந்திருந்த மதுமிதா, தீர்க்கமாக சுய்யாவைப் பார்க்கிறாள் - சன்னலுக்கு வெளியே இருந்து பேசிக் கொண்டிருக்கும் குலாபியைப் பார்க்கிறாள். புரிந்து கொண்ட குலாபி, வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போவதாகக் கூறி படகில் ஏற்றி அக்கறைக்கு அழைத்துச் செல்கிறாள் - பணக்கார கிழ ஓநாய்கள் வாழும் வீடு ஒன்றிற்கு.

சுய்யாவைக் காணாத சகுந்தலா பதறி தேடுகிறாள். குலாபியினால், அக்கறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதை அறிந்த அவள், படகுத் துறைக்கு வந்து, படகோட்டிகளை எழுப்ப முயல்கையில், குலாபி திரும்பி படகைக் கரையில் நிறுத்தி விட்டு தப்பி ஓடுகிறாள் - சகுந்தலாவைக் கண்டு அவளுக்கு அச்சம். படகில், பிய்த்தெறியப்பட்ட பூமாலையைப் போன்று வாடிக்கிடக்கிறாள் சுய்யா. கல்யாணிக்கு மாற்றாக, சுய்யாவை பலியிட நினைக்கும் மதுமிதாவிடமிருந்து, சுய்யாவைக் காப்பாற்றத் தீர்மானிக்கிறாள், சகுந்தலா. அதே வேளையில், சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட காந்தி, புகைவண்டி நிலையத்தில், காலைப் பிரார்த்தனை செய்கிறார் - எல்லோரும் கலந்து கொள்ள வாருங்கள் என ஒலி பெருக்கி அழைப்பு வருகிறது.

சகுந்தலா செல்கிறாள் - காந்தி உணமையே கடவுளென உரையாற்றுகிறார். சுய்யா அந்த விதவைகள் விடுதியெனும் நரகிலிருந்து தப்ப வேண்டுமென்றால், காந்தியுடனே அனுப்பி வைக்கப்படவேண்டும் என்று உணர்கிறாள். ஆனால், சகுந்தலாவால், காந்தியை நெருங்க முடியவில்லை. புகைவண்டி நகர, நகர சகுந்தலாவும், மெல்ல மெல்ல முன்னேறுகையில், சகுந்தலாவின் குரல் கேட்டு, எட்டிப் பார்க்கிறான் - நாராயணன். சகுந்தலா, சுய்யாவை நாரயணனிடம் ஒப்படைக்கிறாள் - காந்தியிடம் சுய்யாவை சேர்த்துவிடுவதான உறுதிமொழியுடன் நாராயணனும் அவளை அழைத்துச் செல்கிறான்.

இத்துடன் படம் நிறைவடைகிறது.

விதவைகளின் பிரச்சினை மட்டுமின்றி பெண்களின் நிலையும் சேர்த்தே பேசப்படுகின்றது. அலங்காரப் பொம்மைகளாக மட்டுமே பெண்களின் உரிமைகள் - நல்ல உடை, நகை, பூ, குங்கும அலங்காரங்கள் - அனுமதிக்கப்படுகின்றன. உதாரணம் நாராயணனின் தாயார். 'வீட்டில் எங்கே இருக்கிறார் தந்தை' என மகனிடம் ஆதங்கப்படும் பொழுது, பெண்களின் நிலைமை அன்றிலிருந்து இன்று வரை மாற்றங்களுக்கு உள்ளாகாமல் அதே நிலைமையில் இருக்கிறதென புரிகிறது.

சகுந்தலா, கல்யாணி காதல் வசப்பட்டதை அறிந்து அவளுள்ளும் வாழ்க்கை குறித்தான ஏக்கங்கள் துளிர்விடுகின்றன. சுய்யாவிடம், தான் பார்ப்பதற்கு எவ்வாறு இருக்கிறேன் என கேட்கிறாள். 'வயதானவளாக இருக்கின்றாய்' என சுய்யா சொன்னதும், முகம் சுருங்கி விடுகிறது. வாழ்க்கையை திருப்பி அடைய முடியாத தூரத்திற்கு வந்து விட்டோம் என புரிகிறது. தான் பணிவிடை செய்யும் கங்கை கரை சாது, அவளிடம் பேசும் பொழுது, இன்னமும் தன்னால், வாழ்க்கையின் பிடிப்பை முற்றிலும் துறக்க இயலவில்லை என்பதைக் கூறுகிறாள். ஆதங்கத்துடன், 'விதவைகளுக்கு இது தான் விதிக்கப்பட்ட வாழ்க்கையோ?' என சாதுவிடம் கேட்கின்ற பொழுது, விதவைகள் மறுமணம் செய்து கொள்ள சட்டமியற்றப்பட்டதை அவளுக்குத் தெரிவிக்கிறார். அதுவரையிலும் அந்த செய்தி, அவளுக்குத் தெரியாது. யாருமில்லை, சொல்லித் தர.

இந்தப் புதிய செய்தி, புது நம்பிக்கைகளை விதைக்க, தான் பெறவியலாத வாழ்க்கையைப் பிறருக்குக் பெற்றுத் தர உறுதி கொள்ளும் பொழுது, சகுந்தலாவின் வாழ்க்கை புது அர்த்தம் பெறுகிறது. மதுமிதாவின் சிறையிலிருந்து, கல்யாணியை விடுவித்து அனுப்புகிறாள். பின்னர், சுய்யாவை தன் திட்டங்களுக்குப் பலி கொடுக்க நினைக்கும், மதுமிதாவிடமிருந்து மீண்டும் காப்பாற்றுகிறாள். சகுந்தலாவாக நடித்த, சீமா பிஸ்வாஸ், இயல்பான தன் நடிப்பால், ஒரு உறுதியான, ஆனால், அதே சமயம் மதவிதிகளை மீற இயலாது தவிக்கும் பெண்ணாக சிறப்பாக நடித்துள்ளார். கல்யாணியாக நடித்த லிசா ரே பார்ப்பதற்கு அழகு. ஒரு இந்தியப் பெண்ணாக நடிப்பதற்கு மிக மெனக்கெடுத்து, இந்திய விதவைப் பெண்களுடன் நேரிடையாகப் பழகி அவர்களுடைய உடல் அசைவுகளையும் உள்வாங்கி நடித்திருக்கிறார். பரிதாபத்திற்குரிய ஒருவராக நடிக்கும் பொழுது, இயல்பாகவே, அந்தக் கதாபாத்திரத்தின் மீது ஒரு ஈடுபாடு வந்து விடும். அது கல்யாணியின் பாத்திரப் படைப்பிற்கு ஒரு வலு. விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட பெண்ணாகக் காட்டப்பட்டாலும், அது குறித்த அருவெறுப்பு ஏதும் வராதிருப்பதற்கு, அந்தப் பாத்திரத்தில் நடித்த லிசா ரேயின், innocent looksம் கூட ஒரு காரணமாக இருக்கக் கூடும். இவர்களையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டுவிடுகிறாள் - சுய்யா பாத்திரத்தில் நடித்த, சரளா என்ற சிறுமி ஹிந்தியோ, ஆங்கிலமோ தெரியாத அவளிடத்தில், மொழி பெயர்ப்பாளர்கள் மூலமும், சைகைகளின் மூலமும் மட்டுமே தொடர்பு கொண்டு, நடிக்க வைத்திருக்கிறார்கள்.

படத்தின் மற்றொரு சிறப்பம்சம் ஒளிப்பதிவு. நீர்ப்பரப்புகளின் நீலம், தாவரங்களின் பசுமை, இருளின் மங்கிய கருமை, விளக்குகளின் மஞ்சள் ஒளித்துகள்கள் என பட நகர்வுகளின் பின்னணி தளத்தில் மௌனமாக இயங்குகிறது, காமிரா. காட்சியின் தேவைக்கேற்ப ஒளியளவு கூடவும் குறையவும் செய்கிறதென்றால், நிழல்களும் அது போலவே. ஒளி குறையும் பொழுதெல்லாம், நகரும் நிழல்கள் ஆக்கிரமிக்கின்றன திரையை. இந்த ஒளிக்கலவையின் உடன், ஒலியும் இசைந்து கொள்கின்றது. பாடல்களுக்கு இசை, A.R.ரஹ்மான். பின்னணி இசை மைக்கேல் டான்னா. இந்திய இசை ஒலிக்குறிப்புகளைக் கச்சிதமாக வரவழைத்திருக்கிறார். காதலர்களின் சந்திப்பின் போது ஒளியும், ஒலியும் வசனங்களைத் தேவையற்றதாக்குகிறது. கங்கை நதியின், அமைதியான ஓட்டத்திற்கு கரையாக நிற்கும், படிக்கட்டுகள் எல்லாம், செட் போடப்பட்டு எடுக்கப்பட்டன என்பது, படத்தின் இயக்குநர் சொல்வதால் தெரிகின்றது. அதிலும், வீடுகள், வீதிகள், கோயில்கள் என அனைத்தும் அதே போல் செட் என்பது எத்தனை உழைப்பு தேவைப்படுகிறது ஒரு திரைப்படத்தை உருவாக்க என அறியவைக்கிறது.

விதவைகள் இத்தனை துயரத்திற்குள்ளாக்கப்பட்டவர்களா என்ற பரிதாபம் இயல்பாக எழுகிறது. படத்தில் விவாதிக்கப்பட்ட விஷயம் - விதவைகளை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவர்கள், சமூக பொருளாதார நிர்ப்பந்தங்களுக்காக, மதத்தின் பேரிட்டு, அதன் மீதாக கற்பிதம் செய்து கொண்ட, இந்து பழமைவாத ஆண்களே என்பது தான். மனு தர்மம் என்ற தத்துவத்தினால் கட்டமைக்கப்பட்ட புரிதலே, விதவைகளுக்கான இந்த பரிதாப நிலை என்ற வாதத்தை முன் வைக்கிறது. படத்தின் தொடக்க வரிகளே, மனு தர்மத்துடன் தான் தொடங்குகிறது. இணையத்தில், இன்று பலரும், மனு தர்மத்தைக் கைவிட்டு விட்டோம் என்று மார் தட்டிக் கொண்டாலும், மனு தர்மம் என்ற மனித உரிமைகளை மறுக்கும் தத்துவங்களை இன்னமும் இந்து மதவாதிகள் கைவிடவில்லை என்பதே, இந்த திரைப்படத்திற்கு எழுந்த எதிர்ப்பு குறிக்கிறது. ஒரு கருத்தாக்கமாக இந்தப் படத்தின் மீது எழுந்த எதிர்ப்பைக் காட்டிலும், தீபா மேத்தாவின் மீது எழுந்த கோபம் தான் முதன்மையானது. அவரது முந்தைய படமான, Fire திரைப்படம் திரையிடப்பட்ட அரங்குகள், தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. புறக்கணிக்கப்படும் பெண்களுக்காக வக்காலத்து வாங்கும் படம் தான் என்றாலும், புறக்கணிப்பிற்கு அடிப்படையான காரணம், மத ஈடுபாடு என்பதும், பெண்கள், தங்கள் பாலியியல் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் சுயதேடுதலே அவர்களது கோபத்தைக் கிளறிவிட்டது. ஒரு பொருளாகப் பார்க்கப்பட்ட பெண், தனக்கென சுயவிருப்பமும், அதை தேடி அடைய முயற்சித்து, பெண் என்ற தன் ஆளுமையை வெளிப்படுத்த முனைந்ததும் தான் அவர்களது கோபத்தின் அடித்தளம். பெண் என்ற ஆளுமையை வெளிப்படுத்த முனைவது எந்த மதத்திலும் அனுமதிக்கப்படவில்லை என்கையில், இந்து மத அடிப்படைவாதிகளும் அதைத் தடை செய்ய முனைந்ததில் வியப்பில்லை தான்.

இந்தப் பின்னணியில், படத் தொடக்கத்தின் போது கசிந்த செய்திகளைக் கொண்டு, மீண்டும் தீபா மேத்தா, இந்து மத விமர்சனத்தில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்தியே விடவேண்டும் என்ற தீர்மானத்துடன் செயல்பட்டது, இந்து மத அடிப்படைவாத அமைப்புகள். சமூக புறக்கணிப்பு என்ற கொடூரமான அவலத்தை விதவைகள் மீது பிரயோகித்து, விளிம்பு நிலை மனிதர்களாக - எந்த வித உரிமையுமின்றி, வாழச் செய்யும் அவலத்தைக் குறித்தான கேள்வி, இந்து மதத்தின் மீதான தாக்குதலாக எடுத்துக் கொண்டனர். இந்து மதத்தைக் காப்பாற்றுபவர்கள் என்ற பிம்பத்தைத் தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள, தங்கள் இருப்பை நிலை நிறுத்திக் கொள்ள, இந்த அடிப்படைவாதிகளின் முனைப்பு தான் இந்த திரைப்படத்திற்கான வன்முறையான எதிர்ப்பு. இந்தியாவைப் பற்றிய தவறான தகவல்களைத் தருகிறார் மேல்நாட்டினருக்கு என்று பிரச்சாரம் வேறு. சத்யஜித் ரேயின் மீது கூட இத்தகைய தவறான பிரச்சாரம் உண்டு - 'இந்தியாவின் ஏழ்மையை மேல்நாட்டினருக்கு விற்கிறார்' என்று. அப்பொழுது ஒரு கருத்துப் பிரச்சாரமாக, வாதமாக வைத்த தன்மை இப்பொழுது அடியோடு மாறி, தீ வைப்பாகவும், கொடும்பாவி எரிப்பாகவும், கொலை மிரட்டலகாவும் மாறி முன்னேற்றம் பெற்றிருக்கிறது. இந்த அடிப்படைவாதிகள் செய்த வன்முறை தான் இந்தியாவிற்கு தொடர்ந்து அவமதிப்புகளை தேடித்தருகிறது என்பதை புரிந்து கொள்வதில்லை. புரிந்து கொண்டாலும், உள்ளூரில், தங்கள் சரக்கு விலை போக வேண்டுமென்றால், இத்தகைய 'மத பாதுகாப்பு வன்முறை' கட்டவிழ்ப்பின் மூலமே சாத்தியப்படும் என்பதை அறிந்தே தான் செய்கிறார்கள்.

தாலி செண்டிமெண்ட் என்ற தமிழ்ப்பட நிரந்தர கதையமைப்பு முறையைக் குறித்து ஒரு முறை கூட இவர்கள் வாய் திறப்பதில்லை. ஏனென்றால், தாலி செண்டிமெண்ட் என்ற கருத்தாக்கமே, ஆண்களின் நலனைப் பேண வேண்டும் என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் கட்டமைப்புச் செய்யப்பட்டது என்னும் பொழுது, அது அவர்கள் விரும்பிய சமூக சிந்தனையை ஒட்டி அமைந்திருக்கிறது. ஆண் மேலாதிக்கம் என்ற ஒழுங்கமைவை ஏற்றுக் கொண்டு அதை வலியுறுத்தி திரைக்கதை அமைப்பதால், அது குறித்து எந்த ஒரு ஆட்சேபணையுமின்றி, அனுமதிக்கின்றனர். அதை தங்களை மெச்சி விட்டதாக நினைத்து, இன்னும் விழிப்புறாத பெண்கள் மிகுந்த ஆதரவு தந்து, தங்களைத் தாங்களே அவமதித்துக் கொள்கின்றனர். கண்ணடைத்துக் கிடக்கும் பெண்களே, சமூகத்தின் நலன் விரும்பிகள் என்ற சித்தாந்தில் எல்லாம் சுமூகமாகவே இருக்கிறது. யாராவது பெண்கள், அதையும் மீறி, செயல்படவோ, சிந்திக்கவோ, கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவோ முனைந்தால், அவர்களை எதிரியாகப் பாவித்துப் போராடுகின்றனர்.

விதவைகளின் நிலை இன்று பெருமளவில் மாறிவிட்டது. இந்தக் கதை காலத்திற்கு ஒவ்வாதது. அதனால், இந்தத் திரைபடத்திற்கு இப்பொழுது அவசியம் என்ன வந்து விட்டது என கேட்பவர்கள், விமர்சிப்பவர்கள் இருக்கத் தான் செய்கின்றனர். ஜெயா தொலைக்காட்சியில், தினமும் 8.30 மணிக்கு, கிரிஜா என்ற தொடர் ஒன்று வருகிறது. தற்செயலாக, ஒவ்வொரு சேனலாக உலாவிக் கொண்டிருந்த பொழுது, கண்ட ஒரு காட்சி - விதவைகள் விடுதிக்காக, நிதி வசூலிக்க ஒரு பெண் வருகிறார். அவரிடம், நிதி தருவதற்குப் பதிலாக தங்கள் வீட்டிலிருக்கும் விதவைப் பெண்ணை விடுதிக்குள் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றே பேரம் பேசுகின்றனர். அதிலும் வயதான பெண்ணாக வரும் பாத்திரம் பேசும் வசனம் - "இந்த தண்டத்தை ஒழித்துக் கட்ட இதைவிட நல்ல சந்தர்ப்பம் இல்லை" இன்றும் விதவைகள் விரும்பப்படாதவர்கள், அவர்களை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற சிந்தையுடையவர்கள் இருக்கத் தான் செய்கின்றனர் - அத்தகைய நிகழ்வுகள் நடக்கத் தான் செய்கின்றன.

எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தாற் போன்று, கடந்த தேர்தலின் போது என்ன நடந்தது? 'சோனியா காந்தி பிரதமரானால், என் தலையை மொட்டையடித்து, வெள்ளையுடை அணிந்து, விதவையாகி விடுவேன்' என சுஷ்மா சுவராஜ் பேசினார். அதாவது, அத்தகைய கொடூரமான விதவை வாழ்க்கையை ஒரு தண்டனையாக ஏற்றுக் கொள்வேன் என்ற பொருளில் சுஷ்மா பேசினார். இன்னும் அவரது பார்வையில், ஒரு பெண்ணாக இருந்தும், விதவை என்ற கோலத்தைப் பற்றிய கருத்து இத்தகையது என்னும் பொழுது, இந்தத் திரைப்படம் போல இன்னும் பல திரைப்படங்கள், கேள்வி எழுப்பும் படங்கள் வரத்தான் செய்ய வேண்டும். குறைந்த பட்சம், சுஷ்மா சுவராஜ் போன்ற தலைவிகள் விழிப்படைய. அத்துடன் அவர்களது புரவலர்களான சங் பரிவாரங்களும், சிவ் சேனைகளும், பாரதீய ஜனதா அமைப்புகளும் விழிப்படைய.

Tuesday, April 17, 2007

திரைப்படங்களுக்காக...

இந்தப் பதிவில், திரைப்படங்களைப் பற்றிய செய்திகள் பார்வைகள் விமர்சனங்கள் எழுதுவேன்.

இங்கு சினிமா, சினிமா, சினிமா மட்டுமே.

வேறு ஏதேனும் சண்டை சச்சரவுகளை இழுத்து வராதீர்கள்

உங்கள் பின்னூட்டங்களும் சினிமா பற்றியதாக மட்டுமே இருக்கட்டும்.

நன்றி....

அட் ஃபைவ் இன் த ஆஃப்டர்நூன் - ஆனந்த விகடன் விமர்சனம் அல்ல.

இது நண்பன் வலைப்பக்கத்தில் இருந்து வந்த ஒரு மீள்பதிவு தான். இந்த வார ஆனந்த விகடனில் இந்தப் படத்தைப் பற்றிய ஒரு விமர்சனம் வந்துள்ளது. படித்துப் பாருங்கள் இரண்டையும்.

பின் ஒப்பிட்டு எழுதுங்கள்..

சமீபத்தில் ஆசிப் மீரான் எழுதிய கலைப்படங்கள் மீதான பார்வை என்ற பதிவு தந்த தாக்கம் தான் இது.

இது வரையிலும், நான் தாக்கம் பெற்று எழுதிய பதிவுகளை எல்லாம், எல்லோருமே ஒரு மிரட்சியோடு தான் படித்திருப்பார்கள் என்று எண்ணுகிறேன். ஆனால், இது அதிலிருந்து மாறுபட்ட ஒரு பதிவாக இருக்கும்.

கலைப்படங்களைப் பற்றிய என்னுடைய கண்ணோட்டம் இப்பதிவு.

முதலில் கலைப்படங்கள் என்ற வகைப்படுத்தலையே தவறு என்று சொல்ல வேண்டும். எவரும் கலைப்படம் எடுக்கிறோம் என்ற எண்ணத்துடன் திரைப்படம் எடுப்பதில்லை. முதல் போட்டு முதல் எடுப்பவர்களே தங்கள் படங்களைப் பற்றிய ஒரு ஜம்பத்தையும் பிம்பத்தையும் வளர்க்க தங்கள் படைப்புகளைப் பற்றிய முன்முடிவுகளை, அறிவிக்கிறார்கள்.

ஆனால் மற்றவர்கள் தாங்கள் நம்பும் விஷயங்களைப் படமாக்குகிறோம் என்ற நம்பிக்கையில் மட்டுமே, அது வரையிலும் நடைமுறையில் இருந்த திரை மசாலாக்களை ஒதுக்கி விட்டு, இயல்பான படங்களை எடுக்கின்றனர். அந்த இயல்புத் தன்மையே அவற்றை மற்ற படங்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது. அவற்றை என்னவென்று சொல்லி அழைப்பது என்ற சிக்கலுக்குள் நுழையும் பொழுது தான் அவற்றை கலைப்படங்கள் என்று கூறத்தொடங்கினோம்.

திரைப்படம் என்பதே ஒரு கலைவடிவமாக இருக்கையில், தீவிரமான ஈடுபாட்டுடன் செய்யப்படும் படங்களைக் கண்டு மிரண்டு போன திரைத்துறை வியாபாரிகள், பொழுதுபோக்கை மட்டுமே விரும்பும் மக்களிடத்தில் தங்கள் படங்களை மிக எளிதாக எடுத்துச் செல்ல, அவற்றை வேறுபடுத்திக் காட்ட, உண்மையான படைப்புகளை கலைப்படங்கள் என்று பெயரிட்டு, வேறுபடுத்தத் தொடங்கினார்கள். பொழுது போக்க மட்டுமே திரைப்படங்களுக்கு செல்லும் மக்கள் அதிகரித்ததும், இந்த இயல்பான படைப்புகள், ஒதுக்கப்பட, போலிகள் முன்னணிக்கு வந்து விட்டது நமது துரதிர்ஷ்டமே.

அது போகட்டும், என்னிடம் உள்ள திரைப்பட சேகரிப்பில் இருந்து உங்களுக்காக ஒரு படம் -

At Five in the Afternoon.



இது பிரபலமான ஸ்பானிஷ் கவிஞர் எழுதிய ஒரு கவிதையில் வரும் வரி. ஃபெடரிகோ கார்சியா லோர்கா என்பவர் எழுதியது. இந்தக் கவிதைக்கு இந்த திரைப்படத்திலும் ஒரு மிக முக்கியமான பாத்திரம் உண்டு. அதை பின்னர் பார்ப்போம்.

முதலில் படத்தின் கதை:

தாலிபான்கள் ஆட்சி முடிவுற்று, பாகிஸ்தானிலிருந்து தாயகம் திரும்பும் ஆஃப்கானிஸ்தானிய அகதிகள் தான் இந்தப் படத்தின் கதைக்களம்.

சிதிலமடைந்த கட்டிடங்களுக்கு நடுவே தங்க இடம் கிடைப்பதில் போட்டியில் தொடங்கி, சிறு சிறு சச்சரவுகளுடன், தொல்லை மிகுந்த அந்த துரதிஷ்ட வாழ்க்கையை மக்கள் எதிர்கொள்ளும் விதத்தைப் பின்னணியாக வைத்துக் கொண்டு, ஆஃப்கானிஸ்தானின் அதிபராக வேண்டும் என்ற கனவுகளுடன் தன் கல்வியைத் தொடரும் ஒரு பெண், அவளது பழமைவாத தந்தை, காணாமல் போன தன் சகோதரனைத் தேடிக் கொண்டே இருக்கும் அவனது மனைவி, இத்துடன் வருங்கால ஆஃபானிஸ்தான் அதிபரைக் காதலிக்கும் ஒரு கவிஞன் என்ற அகதிகளான இவர்களளுடன் கை கோர்த்து கொண்டு, கதையும் நடக்கிறது. அவர்கள் மூலமாக பெண்களின் நிலையை, குறியீடுகள் மூலம் நமக்குப் புரிய வைக்க முயல்கிறது கதை.


நோக்ரா - கதை நாயகி. ஆஃகானிஸ்தானத்தின் அதிபராக வரவேண்டும் என்ற தீராத ஆசையை உள்ளுக்குள் வளர்த்துக் கொள்கிறாள். அவள் பள்ளியில் நடக்கும் ஒரு சிறு விவாதத்தில் கவனம் பெற்று, அந்த ஆசை உண்டானது. தீவிரவாதத்தை எதிர்த்து அழிக்க வேண்டுமென்றால், ஒரு பெண்ணே அதிபராக வேண்டும் என்ற கருத்தை உதிர்க்கும் மினா என்ற அவள் வயதையொத்த பெண், நோக்ராவின் கண் முன்னே, சாலையில் என்றோ புதைத்து வைக்கப்பட்ட கண்ணி வெடிகுண்டில் அடிபட்டு இறந்து போகிறாள். அதைக் காணும் நோக்ரா இன்னும் உறுதி கொள்கிறாள்.

அவள் தந்தைக்கோ வாழ்க்கையில் உள்ள ஒரே பிடிப்பு, தொலைந்து போன தன் மகனைத் தேடிக் கண்டுபிடித்து தன் மருமகள் கையில் ஒப்படைக்க வேண்டும். தொழில்: குதிரை வண்டியோட்டுவது. முகத்திரை அணியாத பெண்களை வண்டியில் ஏற்ற மாட்டார். தவறிப் போய் பார்த்து விட்டாளோ, இறைவனிடம் அதற்காக மன்னிப்பு கோருவார். மற்றொரு கவலை: தங்குவதற்கு - குளிரிலிருந்து தப்புவதற்கு இடம் பார்ப்பது. ஒவ்வொரு இடத்திற்கும் ஒரு போட்டி வந்து விடுகிறது. முதலில் தங்கி இருந்த ஒரு இடத்தில், அவரது மகளே, அகதிகளாக வந்தவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க அவர்களால் அவளது சிதிலமடைந்த கட்டிட வீடும் ஆக்கிரமிக்கப்பட, அமைதியாக தொழுவதற்கும், பெண்களை மறைவாகப் பாதுகாக்கவும் வீடு தேடி அலைவதே மீதி நேரத்தில் அவருக்கு இருக்கும் பணி.

இந்த எளிமையான கதையில் வரும் ஒரு அசாத்தியாமான குறியீடு - தூய வெள்ளை நிறத்தையுடைய குதிங்கால் உயர்ந்த காலணி. The high heel shoe. அதை அணிவதற்கு தந்தையிடமிருந்து தடை. புதுமையை ஏற்க மறுக்கும் தந்தையின் கண்களிலிருந்து மறைத்து வைத்திருக்கிறாள். தந்தை இல்லாத இடங்களில் அதை எடுத்து அணிந்து, தன் அதிபர் ஆசையின் கனவுகளைச் சுமந்த படி, கம்பீரமாக நடக்கிறாள். பெண்கள் எழுச்சி பெற வேண்டும் என்பதற்கான குறியீடாகவே, அந்த காலணி படத்தில் உயிர் பெறுகிறது. அதே சமயம் பழமைவாதியான ஆண்கள் முன்னால், அது மறைக்கப்படுகிறது. அதுவே அந்தக் கதையின் மையக் கருத்தும். பெண்கள் கல்வி பெறுகின்றனர் என்பதை உணர்த்த செய்தித் தாள் வாசிப்பவளாகக் காட்சி அமைக்கப்படுகிறது. அதுவும் பழமைவாதிகளின் கண்களுக்குத் தெரியாமல் இரவின் தனிமையில் மறைத்து மறைத்து வாசிக்கப்படுகிறது.

மற்றுமொரு குறியீடு, அவளது குடை. அதிபராகும் எண்ணம் வரும்பொழுதெல்லாம், அந்தக் குடை விரிகிறது. தலையைச் சுற்றிய ஒரு ஒளிவட்டம் போல அதை உயர்த்திப் பிடித்துக் கொண்டு, உறுதியுடன் வீரநடை நடக்கிறாள். குடை தரும் பாதுகாப்பிற்காக, அதை உயர்த்திப் பிடிக்க முனைவதும் அவளது அதிபராகும் ஆசையின் நோக்கத்தை பிரதிபலிப்பதாக இருக்கிறது. எல்லோருக்கும் பாதுகாப்பு, எல்லோருக்கும் ஆதரவு...
இத்தகைய குணங்கள் கொண்ட, இவளை அகதியாகத் திரும்பும் ஒருவன் நேசிக்கிறான். காதலைக் குறித்தான வசனங்கள் எதுவும் கிடையாது - ஊர் பழிச்சொல் பேசுமே என்ற கவலையை அவள் சொல்வது தான் காதலைக் குறிக்கிறது. தவிர தந்தையின் பழமைவாதம் அவளுக்குத் திரையிடுகிறது. அவன் அவளுக்கு செய்தித்தாள் சேகரித்து கொடுக்கிறான். ஒரு பிரஞ்ச் படை வீரனுடன் அவள் பேசும்பொழுது, அவளுக்கு மொழி பெயர்ப்பவனாகும் அவன், தன் மூன்று சகோதரர்களை யுத்தத்தில் இழந்தவன் - ஒருவன் ரஷ்யாவிற்கு, மற்றவன் அமெரிக்காவிற்கு, இன்னுமொருவன் தாலிபான்களுக்கு. அந்நிய சக்திகளால் ஆஃப்கானிஸ்தான் எப்படி சீரழிந்தது என்பதை எளிதாக, ஒரு அங்கத உணர்வோடு சொல்லி, அதனால் தான் யுத்தத்தைக் கைவிட்டு கவிஞனாகிவிட்டேன் என்று கூறுகிறான். அவர்கள் போகுமிடமெல்லாம் அவனும் இடம் பெயர்கிறான். அவளோ தன் தந்தைக்கு அஞ்சுகிறாள். அவனோ, அவளுக்கு பிரபலமான ஸ்பானிஷ் கவிதை ஒன்றை வாசித்துக் காட்டுகிறான்.

At five in the afternoon,
It was exactly five in the afternoon
The rest was death and death alone
With sweet mists, and deep shores
Which will carry away the bull’s body
The bull does not know you,
Nor the fig tree, nor the horses
Nor the ants in your house
Because you have died forever
Ah, That terrible five in the afternoon!
It was five by all the clocks, it was
Five in the shade of the afternoon

(இந்தக் கவிதை மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது. இந்தக் கவிதையை எழுதிய கவிஞனைப் பற்றிய முழுமையான தகவலைப் படிக்க விரும்புபவர்கள் எஸ்.ராம்கிருஷ்ணன் எழுதிய விழித்திருப்பவனின் இரவு என்ற புத்தகத்தைப் படியுங்கள்: லோர்கா எனும் ஜிப்ஸி பக்கம் 101.)

படம் உச்ச கட்டத்தை நோக்கி நகர்கிறது - காணாமல் போன தன் மகன் இறந்து விட்டான் என்ற செய்தியைக் கேட்டு - இங்கு தான் படத்தின் கவித்துவமான காட்சி வருகிறது - மிகப்பழமைவாதியான அந்த தந்தை, தன் மருமகளிடமிருந்து அந்தச் செய்தியை மறைக்கிறார். அவரால் சொல்ல முடியவில்லை. அந்தப் பெண்ணை ஒரு விதவையாக மாற்ற விரும்பவில்லை. அதனால், அவள் என்றென்றும் கணவனைத் தேடுபவளாக இருக்கட்டும் என்று விஷயத்தை தன்னுள்ளே புதைத்து மறைக்கிறார்.

செய்தியைப் புதைத்து விட்டாலும், மனம் ஓலமிடுகிறது. தனிமையில் தன் குதிரையிடம் புலம்புகிறார்.




'உனக்குப் புல்லைத் தவிர,
எவற்றையும் அறியும்
ஞானமில்லையென்றாலும்
துணை இறந்த அன்று
உதிர்த்தாயே ஒரு கேவல்
அதைக் கூட செய்ய இயலவில்லை
என்னால்
இனி என்றென்றுமே
அத்தகைய ஒரு கேவலை
உதிர்த்துவிடாதே என் முன்னால்...'

(வசனத்தைக் கவிதையாக மாற்றியது நான்)

தந்தையின் புலம்பலை மறைந்து இருந்து கேட்கும் நோக்ராவிற்கு புரிகிறது. என்றாலும் அவளும் மௌனம் காக்கிறாள் தன் தந்தையினுள் மாற்றத்தை விளைவித்த மௌனத்தைப் பங்கிட்டவளாய்.

இந்த ஊரில் இருந்தால், யாராவது அவளிடம் செய்தி சொல்லி விடுவார்களோ என்று பயந்து, மீண்டும் இடம் பெயர முடிவெடுக்கிறார் - அந்த ஊரை விட்டு நிரந்தரமாக. அவரின் பழமைவாதம் மொத்தமாக அமிழ்ந்து போக, புது மனிதனாக தன்னையுமறியாமலே உருவெடுக்கிறார்.

பயணத்தின் ஊடே, தன் மகனின் ஒரே குழந்தை குளிரினால் மிகவும் நோயுற்று விட,
ஒரே சிகிச்சையாக தன் குதிரை வண்டியை தீ வைத்து, குளிர் நீக்க முயல்கிறார். நாளைய பிழைப்புக்கு வழி? - அதை நாளை பார்ப்போம். இப்பொழுது குழந்தையைக் காப்போம். பற்றி எரிகிறது குதிரை வண்டி.

மறுநாள் பகல் முழுவதும் பாலைவனத்தில் நடக்கிறார்கள். இறந்து கொண்டிருக்கும் ஒரு கழுதைக்கு அருகே ஒரு வயதான மனிதன் அமர்ந்து கொண்டிருக்கிறான். இவர்களைப் பார்த்ததும் அவன் வழி கேட்கிறான் காந்தகாருக்குப் போக. கையிலிருக்கும் குழந்தையும் இறந்து விடுகிறது. தண்ணீர் எடுத்து வர இரு பெண்களையும் அனுப்பி விட்டு, இறந்த குழந்தையைப் புதைக்க குழி தோண்டிக் கொண்டே, அவனிடம் பேச்சுக் கொடுக்க, அவன் காந்தாகாருக்கு சென்று, முல்லா உமரை சந்திக்க வேண்டும் - அறிவு மிக்க மனிதர்களை எல்லாம் அவர் அழைத்திருக்கிறார். பின்லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டுமா இல்லையா என்பதைப் பற்றி கருத்தறிய. அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு ஈமான் உள்ள முஸ்லிமை என்றுமே அமெரிக்காவிடம் ஒப்படைக்கக் கூடாது என்று அவரிடம் சொல்லத் தான் போகிறேன் என்கிறான்.

'போ, முட்டாளே, காந்தகாருக்கு அல்ல, உன் ஊருக்கு. அமெரிக்கர்கள் ஏற்கனவே வந்தாகிவிட்டது. திரும்பி போ' என்று ஆத்திரத்துடன் பதிலுரைக்கிறார். That summarizes the change from a fundamentalist to a liberated man - the Afghan man.

தண்ணீர் எடுக்கச் செல்லும் நோக்ராவோ, இரவில் ரகசியமாக தான் வாசித்து வந்த தன் காதலனின் கவிதையை இப்பொழுது வாய்விட்டே பொல்கிறாள். அவளுக்குத் தெரியும் - இனி தன் தந்தை ஒரு பழமைவாதி அல்ல. தன் காதலுக்குத் தடை இல்லை என்று.

புதிய நம்பிக்கைகளை விதைக்கிறது படம்.

பார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால், தவற விடாதீர்கள்.


இனி வாசிக்கப் பொறுமையிருந்தால், தொடருங்கள்:

இந்தப் படம் இரண்டு விருதுகளைப் பெற்றிருக்கிறது

1. Golden Peacock International Film Festival of India.
2. Prix Du Jury - Cannes Film Festival

படத்தை இயக்கிவர் : ஸமீரா மக்மல்பாஃப். அவரது தந்தை - மொஹ்சென் மக்மல்பாஃப். ஈரானைச் சேர்ந்தவர்கள்.

ஸமீரா இயக்கிய மற்ற படங்கள்:

1. The Apple
2. Blackboards

தந்தை இயக்கிய பிரபலமான படம் : Kandahar

Film Credits



Director Samira Makhmalbaf


Screenplay S. Makhmalbaf, M. Makhmalbaf
Photo
Editing Mohsen Makhmalbaf
Decor
Music Mohamad Reza Darvishi
Cast Agheleh Rezaie Abdolgani Yousefrazi Razi Mohebi Marzieh Amiri

படத்தின் முன்னோட்ட காட்சிகள் சிலவற்றிற்கு:

http://www.filmfestivals.com/cgi-bin/fest_content/festivals.pl?debug=&channelbar=&fest=cannes2003&partner=&page=films&year=2003&lang=en&film_id=6901

Friday, March 2, 2007

ஒரு அறிமுகம்

எப்பொழுதும் விவாதங்களையே செய்து கொண்டிருப்பதனால் உண்டாகும் அழுத்தம் தவிர்க்கும் பொருட்டும், மற்ற எனது ஆர்வங்களையும் வெளிக் கொண்டு வரும் பொருட்டும், ஒரு புதிய தளமாக இது இருக்கும்.

இங்கு திரைப்படம் மற்றும் அது சார்ந்த துறைகL, பொழுதுபோக்கு வகைகளை மட்டும் எழுதுவதாக உத்தேசம்.


அன்புடன்

நண்பன்